பாகிஸ்தானில் துப்பாக்கியால் சுட்டு சுதந்திர தினத்தை கொண்டாடியதில், 8 வயது சிறுமி உள்பட மூவர் பலியாகியுள்ளனர்.
மேலும், குண்டு பாய்ந்ததில் காயமடைந்த 60 -க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தான் முழுவதும் இன்று (ஆகஸ்ட் 14) சுதந்திர நாள் கொண்டாடப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், கராச்சி நகரில் சுதந்திர நாளை கொண்டாடும் வகையில் ட்ரோன் மூலம் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில், 8 வயது சிறுமி, 60 வயது முதியவர் உள்பட 3 பேர் துப்பாக்கி குண்டு பாய்ந்து பலியாகியுள்ளனர்.
கராச்சி நகரின் லியாகுதாபாத், கொரங்கி, லியாரி, மெஹ்மூதாபாத், அக்தர் காலனி உள்பட பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட வான்வழித் துப்பாக்கிச் சூட்டில் 64 பேர் காயமடைந்துள்ளதாக ஜியோ நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதில், காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகத்தின் பேரில் 20 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து நவீன துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
பாகிஸ்தானில் பண்டிகை கொண்டாட்டங்களின் போது, வான்வழித் துப்பாக்கிச் சூடு நடத்துவது வழக்கமாக மாறியுள்ளது. இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த 2024 சுதந்திர நாள் கொண்டாட்டத்தின் போதும், இதுபோன்று நடத்தப்பட்ட வான்வழி துப்பாக்கி சூட்டில் 95 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.