போப் பதினான்காம் லியோவின் முதல் வெளிநாடு பயணம்! எங்கு தெரியுமா?
போப் பதினான்காம் லியோவின் முதல் வெளிநாடு பயணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது...
போப் பதினான்காம் லியோ, தனது முதல் வெளிநாடு பயணமாக லெபனான் நாட்டுக்குச் செல்வதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கத்தோலிக்க திருச்சபையின் தலைமை மதகுருவாகவும் மற்றும் வாடிகன் நகரத்தின் தலைவருமாகவும் போப் பதினான்காம் லியோ, கடந்த மே மாதம் முதல் பதவிவகித்து வருகின்றார். தனக்கு முன்பு பதவி வகித்த மறைந்த போப் பிரான்சிஸை போலவே இவரும், போர்நிறுத்தங்களையும், உலக அமைதியையும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றார்.
இந்நிலையில், வரலாற்றில் அமெரிக்காவைச் சேர்ந்த முதல் போப் பதினான்காம் லியோ தனது முதல் வெளிநாட்டு பயணமாக, லெபனான் நாட்டுக்குச் செல்வார், என அந்நாட்டைச் சேர்ந்த கார்தினல் பெச்சாரா பௌட்ரஸ் ராய் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
இதுகுறித்து, சவுதி அரேபியாவைச் சேர்ந்த தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில்,
“போப் பதினான்காம் லியோ விரைவில் லெபனான் நாட்டுக்கு பயணம் மேற்கொள்வார். இருப்பினும், அந்தப் பயணம் எப்போது என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஆனால், வரும் டிசம்பர் மாதத்திற்குள் அவர் எப்போது வேண்டுமானாலும் தனது பயணத்தைத் துவங்கலாம். இதுகுறித்து, வாடிகன் அரசுதான் தெரிவிக்க வேண்டும். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன” என அவர் கூறியுள்ளார்.
இறுதியாக, மறைந்த போப் பதினாறாம் பெனடிக்ட், கடந்த 2012 ஆம் ஆண்டின் செப்டம்பரில் தனது கடைசி வெளிநாடு பயணமாக லெபனான் நாட்டுக்குச் சென்றார். அவருக்கு பிறகு பதவிக்கு வந்த மறைந்த போப் பிரான்சிஸ் அந்நாட்டுக்குச் செல்ல தொடர்ந்து முயற்சித்து வந்தபோதிலும், அங்கு நிலவும் அரசியல் மற்றும் பொருளாதாரச் சூழ்நிலைகளால் அது நிறைவேறாமல் போனது.
இதையடுத்து, காஸா மீதான இஸ்ரேலின் போர் உள்பட மத்திய கிழக்கில் நிலவும் வன்முறைகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு மத்தியஸ்தம் செய்ய தயார் என போப் பதினான்காம் லியோ அறிவித்திருந்தார்.
இத்துடன், அவரது லெபனான் பயணம் குறித்து வாடிகன் நகரத்தின் செய்தித்தொடர்பாளர் எந்தவொரு கருத்தும் தெரிவிக்கவில்லை. எனவே, போப் பதினான்காம் லியோவின் பயணம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருவேளை, அவ்வாறு அவர் லெபனான் நாட்டுக்குச் சென்றால், நீண்டகாலமாக அந்நாட்டின் ஹிஸ்புல்லா கிளர்ச்சியாளர்களுக்கும், இஸ்ரேலுக்கும் இடையில் நடைபெற்று வரும் மோதல்கள் முடிவுக்குக் கொண்டுவரப்படும் என நிபுணர்கள் கூறுவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: செம்மணி புதைகுழியில்...! குழந்தைகளின் உடைகள், பாட்டில், 141 பேரின் எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு!
It has been reported that Pope Leo XIV will be traveling to Lebanon for his first foreign trip.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.