பாகிஸ்தானில் மதரஸா பள்ளி மீது ட்ரோன் தாக்குதல்! 9 குழந்தைகள் படுகாயம்!
பாகிஸ்தானில் ட்ரோன் தாக்குதலில் 9 குழந்தைகள் படுகாயமடைந்தது குறித்து...
பாகிஸ்தானில், மதரஸா பள்ளிக்கூடத்தின் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 3 சிறுமிகள் உள்பட 9 குழந்தைகள் படுகாயமடைந்துள்ளனர்.
கைபர் பக்துன்குவா மாகாணத்தின், டேங்க் மாவட்டத்தில் உள்ள ஷாதிகேல் கிராமத்தின் மதரஸா பள்ளிக்கூடத்தில் ஏராளமான சிறுவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இதையடுத்து, கடந்த வியாழக்கிழமை (டிச. 25) வழக்கமான வகுப்புகளில் மாணவர்கள் பங்கேற்றிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, வகுப்புகள் நடைபெற்ற வேளையில் அந்தப் பள்ளியின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில், 6 சிறுவர்கள் மற்றும் 3 சிறுமிகள் படுகாயமடைந்துள்ளனர்.
Advertisement
தகவலறிந்து அங்கு விரைந்த பாகிஸ்தானின் பாதுகாப்புப் படையினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்தத் தாக்குதலுக்கு, எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் இதுவரையில் பொறுப்பேற்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து பாகிஸ்தான் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இத்துடன், மதரஸா பள்ளிக்கூடத்தின் மீதான தாக்குதலைக் கண்டித்தும், உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் உள்ளூர்வாசிகள் இன்று போராட்டம் நடத்தியுள்ளனர்.
முன்னதாக, ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தலைமையிலான ஆட்சி அமைந்தது முதல் அண்டை நாடான பாகிஸ்தானில் நடைபெறும் பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக, அந்நாட்டு அரசு குற்றம்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஹிந்து கடவுள் சிலை தகா்ப்பு: தாய்லாந்து-கம்போடியாவுக்கு இந்தியா கண்டனம்