இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் உளவுத்துறை தலைவர் கொலை!
ஈரான் உளவுத்துறை தலைவர் கொல்லப்பட்டது பற்றி...
ஈரானின் உளவுத்துறை தலைவர் மற்றும் இரண்டு தளபதிகள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
ஈரானின் அணு சக்தி நிலையங்கள், ராணுவ தளவாடங்கள், ராணுவ தளபதிகள், அணுசக்தி விஞ்ஞானிகளைக் குறிவைத்து கடந்த வெள்ளிக்கிழமை முதல் ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ என்ற பெயரில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த தாக்குதல் குறித்து ஆங்கில செய்திக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அளித்த பேட்டியில், தெஹ்ரானில் உள்ள ஈரானின் உளவுத்துறை தலைவர் மற்றும் இரண்டு தளபதிகள் கொல்லப்பட்டதாக அறிவித்தார்.
Advertisement
எங்களின் துணிச்சலான விமானிகள், தெஹ்ரானின் வான்வெளிக்குள் புகுந்து ராணுவ தளங்கள், அணுசக்தி தளங்களை குறிவைத்து வருகின்றனர் என்று அவர் தெரிவித்தார்.
இதனிடையே, ஈரானின் இஸ்லாமிய புரட்சிக் காவல் படையின் உளவுத்துறை தலைவர் முகமது கசெமி மற்றும் துணைத் தலைவர்கள் ஹாசன் மொஹாகெக் மற்றும் மொஹ்சென் பகேரி ஆகியோர் கொல்லப்பட்டதாக ஈரான் ஊடகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக இஸ்ரேலின் தாக்குதலில், ஈரான் முப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் முகமது பகேரி, ஈரான் இஸ்லாமிய புரட்சிக் காவல் படையின் தலைவர் மேஜர் ஜெனரல் ஹொசைன் சலாமி உள்ளிட்ட முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டனர்.
மேலும், இஸ்ரேலின் தாக்குதலில் 224 பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதாக ஈரான் சுகாதாரத்துறை ஞாயிற்றுக்கிழமை அறிக்கை வெளியிட்டது.