தெஹ்ரானிலிருந்து அர்மேனியா வந்த 110 இந்திய மாணவர்கள்! தூதரகம் நடவடிக்கை!
தெஹ்ரானிலிருந்து இந்திய மாணவர்கள் வெளியேறியுள்ளதைப் பற்றி...
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான தாக்குதல்கள் அதிகரித்து வரும் சூழலில், தெஹ்ரானிலிருந்து இந்திய மாணவர்கள் ஏராளமானோர் வெளியேறியதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆபரேஷன் ரைசிங் லயம் என்ற பெயரில் ஈரானின் அணுசக்தி மற்றும் ராணுவ கட்டமைப்புகள் மீது இஸ்ரேல் தாக்குதலில் ஈடுபட்டது. இதனால், இருநாடுகளும் தொடர்ந்து ஏவுகணை மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், பாதுகாப்பு காரணங்களினால் இந்தியத் தூதரகத்தின் நடவடிக்கையின் மூலம், தெஹ்ரானிலுள்ள இந்திய மாணவர்கள் ஏராளமானோர் அந்நகரத்தை விட்டு வெளியேறியதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement
இதில், 110 பேர் அர்மேனியா நாட்டின் எல்லை வழியாக வெளியேறியதாகவும், அவர்கள் அனைவரிடமும் தூதரக அதிகாரிகள் தொடர்பில் இருப்பதாகவும் வெளியுறவுத் துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, தெஹ்ரானில் வசிக்கும், இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினரும் உடனடியாக அந்நகரத்தை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து, ஜம்மு - காஷ்மீர் மாணவர் சங்கம் கூறுகையில், அர்மேனியா வழியாக வெளியேறிய உர்மியா மருத்துவக் கல்லூரியின் 110 மாணவர்களில், 90 பேர் ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் சார்பில் 24x7 செயல்படும் கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியத் தூதரகத்தின் சார்பில், ஈரானிலுள்ள இந்தியர்களின் சேவைக்காக 24 மணிநேரமும் செயல்படக்கூடிய உதவி எண்கள் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: தெஹ்ரானிலிருந்து இந்தியர்கள் வெளியேற அறிவுறுத்தல்!