எக்ஸ் தளம் மீண்டும் விற்பனையானது!
புதிய உரிமையாளராக மாறியிருக்கும் எலான் மஸ்க்கின் எக்ஸ் - ஏஐ நிறுவனம்..
எக்ஸ் தளம் மீண்டும் கைமாற்றப்பட்டுள்ளது. ஆனால், இம்முறையும் அதன் உரிமையாளராக இருப்பவர் எலான் மஸ்க் என்பதுதான் சுவாரசியமே!
எக்ஸ் தளத்தைப் பயன்படுத்தி அதில் கணக்கு வைத்திருப்போர் எண்ணிக்கை 60 கோடிக்கும் மேல். இந்த நிலையில், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப ஆய்வுக்காக எலான் மஸ்க்கால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட எக்ஸ் - ஏஐ பெயரிலான புத்தாக்க நிறுவனத்துடன் எக்ஸ் தளம் இணைக்கப்படுவதாகவும், இவை இரண்டும் இனிமேல் ஒரே நிறுவனமாக செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ட்விட்டர் என்கிற பெயரில் உலகெங்கிலும் அறியப்பட்ட சமூக வலைதளத்தை கடந்த 2022-ஆம் ஆண்டு 44 பில்லியன் டாலர் என்கிற பெருந்தொகை கொடுத்து விலைக்கு வாங்கி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தினார் எலான் மஸ்க். அதன்பின், ட்விட்டர் எக்ஸ் என்று பெயர் மாற்றப்பட்டது.
எக்ஸ் தளத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு ஆதரவாக எலான் மஸ்க் தேர்தல் பிரசார தளமாகவும் பயன்படுத்தி உலகை திரும்பிப் பார்க்கச் செய்த சம்பவங்களும் வரலாற்றில் நிலைத்திருக்கும். இந்த நிலையில், அவரது செயற்கை நுண்ணறிவு ஆய்வு நிறுவனமான எக்ஸ் - ஏஐ, கடந்த பிப்ரவரியில் தன் பிரபல ஏஐ மாடலான க்ரோக்கின், 3-ஆவது பதிப்பாக ‘க்ரோக் 3’-ஐ வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இனிமேல் எக்ஸ் - எக்ஸ் ஏஐ இணைந்து செயல்பவுள்ளது.