செய்யறிவு வருகை! 2030-க்குள் 90% வேலைகள் காலி?
ஏஐ பயன்பாட்டால், 2030 ஆம் ஆண்டுக்குள் 90 சதவிகிதத்தினர் வேலையிழப்பைச் சந்திக்க நேரிடும்.
செய்யறிவு பயன்பாட்டால், வரும் காலங்களில் 90 சதவிகிதத்தினர் வேலையிழப்பைச் சந்திக்க நேரிடும்.
பல்வேறு நிறுவனங்களில் செய்யறிவு (AI - செயற்கை நுண்ணறிவு) பயன்பாட்டின் அதிகரிப்பால், 2030 ஆம் ஆண்டுக்குள் 90 சதவிகித தொழிலாளர்கள் வேலையிழப்பைச் சந்திக்கும் வாய்ப்புகள் இருப்பதாக லூயிஸ்வில் பல்கலைக்கழகத்தின் கணினி அறிவியல் பேராசிரியரான ரோமன் யம்போல்ஸ்கி (Roman Yampolskiy) தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, இந்த வேலையிழப்புக்கு மாற்றாக (Option B) எதுவுமில்லை என்றும் கூறியுள்ளார்.
உலகெங்கிலும் உள்ள பல்வேறு நிறுவனங்களில் செலவைக் குறைக்கவும், வருவாயை அதிகரிக்கவும் செய்யறிவை நோக்கி நகர்கின்றனர். இதனால், மனித தொழிலாளர்களின் வேலை பெரிதும் பாதிக்கப்படுகிறது.
தகவல் தொழில்நுட்பத் துறை மட்டுமின்றி, தொழிற்சாலைகளில் ரோபோக்களின் பயன்பாடும் இருப்பதால், கரத்தால் உழைப்பவர்களும் பாதிக்கப்படுகின்றனர்.
ஆனால், செய்யறிவால் தங்களின் வேலை பறிபோகும் என்பதை பலரும் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர் என்பதுதான் வருத்தம். செய்யறிவு ஆதிக்கத்தில் இருந்து யாரும் தப்ப முடியாது என்று அவர் கூறினார்.
செய்யறிவால் வேலை பறிபோகும் என்று இவர் மட்டுமின்றி பல்வேறு தொழில் மற்றும் பொருளாதார நிபுணர்களும் ஆய்வாளர்களும்கூட கூறுகின்றனர்.
கூகுள் நிறுவனத்தின் முன்னாள் தலைமை வணிக அதிகாரி மோ காவ்டட் கூறுகையில், 2027-க்குள் பல்வேறு நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி உள்பட மென்பொருள் பொறியாளர்கள், டெவலப்பர்கள் மற்றும் பாட்காஸ்டர்கள் (Podcasters) உள்ளிட்ட பதவிகளையும் செய்யறிவு ஆக்கிரமிக்கும் என்று தெரிவிக்கிறார்.
ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டேரியோ அமோடேய் கூறுகையில், அடுத்த 5 ஆண்டுகளில் கருத்தால் உழைப்பவர்களின் (White Collar Jobs) வேலைகள் துடைத்தெறியப்படும் என்று குறிப்பிடுகிறார்.