தோல்வியை நியாயப்படுத்துகிறார் டிரம்ப்! ஈரான் குற்றச்சாட்டு
குழப்பத்தை ஏற்படுத்தும் கருத்துகள் மூலம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது தோல்வியை நியாயப்படுத்துவதாக ஈரான் விமர்சனம்...
குழப்பத்தை ஏற்படுத்தும் கருத்துகள் மூலம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது தோல்வியை நியாயப்படுத்துவதாக ஈரான் விமர்சித்துள்ளது.
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் கதம் அல்-அன்பியா கட்டுமானத் தலைமையகத்தின் செய்தித் தொடர்பாளர் இப்ராஹிம் ஸோல்ஃபகாரி இது தொடர்பாக பேசியதாவது:
''தெற்கு இஸ்ஃபஹானில் அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக ஈரான் படைகள் மேற்கொண்ட வீரம் மிக்க நடவடிக்கை, அமெரிக்க படைகளின் அவமானகரமான தோல்வியை சுட்டிக்காட்டுகிறது.
Advertisement
தனது பலவீனமான படைகளால் நேர்ந்த தோல்வியை மறைக்கவும், நியாயப்படுத்தவும் பொதுமக்களின் கருத்துகளில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் டிரம்ப் தொடர்ந்து பேசி வருகிறார்.
அமெரிக்காவின் படையெடுப்பையும், ஆக்கிரமிப்பையும் எங்களின் வீரம் மிக்க ராணுவ வீரர்கள் மற்றும் கடவுளின் உதவியுடன் உங்களை முற்றிலுமாக நசுக்குவோம் என முன்பே எச்சரிக்கை விடுத்திருந்தோம்.
தெற்கு இஸ்ஃபஹானில் ஈரான் படைகளின் வெற்றி எங்களின் மிகச்சிறந்த துணிச்சலான நடவடிக்கைக்கு உதாரணமாக அமைந்துள்ளது'' எனக் குறிப்பிட்டார்.
இஸ்ரேல், அமெரிக்க படைகள் இணைந்து ஈரான் மீது பிப்ரவரி முதல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில், ஈரானின் தலைமை மதகுருவாக இருந்த அயதுல்லா கமேனி உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளவாடங்களைக் குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. அந்தவகையில் அமெரிக்காவின் எஃப் 15இ ரக போர் விமானத்தை ஈரான் படைகள் சுட்டு வீழ்த்தின.
தென்மேற்கு ஈரானின் வான்வெளியில் பறந்த அமெரிக்காவின் ‘எஃப்-15இ’ போா் விமானம் கடந்த வெள்ளிக்கிழமை, ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்டது.
இதையடுத்து அதிலிருந்த வீரர்கள் இருவர் மாயமான நிலையில் ஒருவர் அமெரிக்கப் படைகளால் அண்மையில் மீட்கப்பட்டிருந்தார். விமானத்தில் இருந்த மற்றொரு விமானியைத் தேடும் பணியில் ஈரான், அமெரிக்க படைகள் தீவிரமாக ஈடுபட்டிருந்தன.