இஸ்லாமாபாத் : இஸ்லாமாபாத் மசூதியில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியதன் பின்னணியில் ஒரு பெண்ணுக்குத் தொடர்பிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
பாகிஸ்தான் தலைநகா் இஸ்லாமாபாதில் உள்ள ஷியா பிரிவு மசூதியில் வெள்ளிக்கிழமை(பிப். 6) தொழுகையின்போது தற்கொலைப் படை பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் 31 போ் உயிரிழந்தனா்; மேலும் 169 போ் காயமடைந்தனா். மேற்கண்ட கொடுங்குற்றச் செயலில் தொடர்புடையவர்களைக் கண்டுபிடிக்க மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணையில், தற்கொலைப்படைத் தாக்குதலை நிகழ்த்தியதாகக் கருதப்படும் நபர் யாசிர் என்று அடையாளம் காணப்பட்டது. அவரது பின்புலத்தை ஆராய்ந்ததில், பேஷாவரில் அவர் வசித்து வந்ததை அதிகாரிகள் உறுதி செய்தனர். இந்தத் தாக்குதலுக்கு முன், அவர் சுமார் 5 மாதங்கள் ஆப்கானிஸ்தானில் தங்கியிருந்து, பயங்கரவாத தாக்குதல்களுக்கான பயிற்சி பெற்று வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதைத்தொடர்ந்து, பேஷாவரில் நடத்தப்பட்ட விசாரணையில், யாசிரின் 2 சகோதரர்களுடன் சேர்த்து ஒரு பெண்மணியும் வெள்ளிக்கிழமை (பிப். 6) நள்ளிரவில் கைது செய்யப்பட்டதாக பாகிஸ்தான் காவல்துறை தெரிவித்துள்ளது. கைபர் பக்துன்க்வாவின் பேஷாவர் பகுதியில் கைது செய்யப்பட்ட மூவரிடமும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இஸ்லாமாபாத் மசூதியில் நடத்தப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியதில் மூவருக்கும் தொடர்பிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.