சீனா உடனான வர்த்தகம் பிரிட்டனுக்கு மிகவும் ஆபத்தானது - அதிபர் டிரம்ப் பேச்சு!
சீனா - பிரிட்டன் இடையிலான வர்த்தக உறவுகள் குறித்து அமெரிக்க அதிபரின் கருத்து...
சீனா நாட்டுடன் வர்த்தகம் செய்வது பிரிட்டனுக்கு மிகவும் ஆபத்தானது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
பிரிட்டன் பிரதமர் கியெர் ஸ்டார்மர் அரசு முறைப் பயணமாக சீனாவுக்குச் சென்றுள்ளார். இந்தப் பயணத்தில், சீன அதிபர் ஷி ஜிங்பிங்கை அவர் நேரில் சந்தித்து உரையாடியுள்ளார்.
இருநாடுகளுக்கு இடையிலான உறவுகளை மேம்படுத்தும் முயற்சியாக, கடந்த 8 ஆண்டுகளில் முதல்முறையாக பிரிட்டன் பிரதமர் ஒருவர் சீனா சென்றுள்ளது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.
இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை (ஜன. 29) அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் மனைவி மெலனியா டிரம்ப்பின் வாழ்க்கை குறித்த ஆவணப் படத்தின் சிறப்புக் காட்சி நடைபெற்றுள்ளது. அந்த நிகழ்வில், கலந்துகொண்டு செய்தியாளர்களுடன் பேசிய அதிபர் டிரம்ப், “சீனாவுடன் வர்த்தகம் செய்வது அவர்களுக்கு (பிரிட்டன்) மிகவும் ஆபத்தானது” எனக் கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபரின் இந்தக் கருத்து பெரும் பேசுபொருளாகியுள்ள நிலையில், பரஸ்பர நன்மை மற்றும் இருதரப்புக்கும் வெற்றி என்றால் அனைத்து நாடுகளுடனும் ஒத்துழைப்பை வலுப்படுத்த சீனா தயாராகவுள்ளது என சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கிரீன்லாந்து விவகாரத்தில் பிரிட்டன் உள்ளிட்ட நீண்டகால கூட்டாளிகளின் மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிக வரிகளை விதித்துள்ளார். இதனால், பெரும்பாலான மேற்குலக நாடுகள் அமெரிக்காவின் கொள்கை எதிரியாகக் கருதப்படும் சீனாவுடன் வர்த்தகம் செய்வதில் கவனம் செலுத்தி வருகின்றன.
ஏற்கெனவே, கனடா பிரதமர் மார்க் கார்னி இம்மாதத் துவத்தில் சீனாவுக்குச் சென்றிருந்தார். சீனாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்தால், கனடா மீது 100 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.