ஈரான் மீது 1,000 கிலோ பங்கர் பஸ்டர் குண்டுகள் வீசி அமெரிக்கா தாக்குதல்!
ஈரான் மீது 1,000 கிலோ பங்கர் பஸ்டர் குண்டுகள் வீசிய அமெரிக்கா...
ஈரானின் மிகப் பெரிய ராணுவ ஆயுதக் கிடங்கைக் குறிவைத்து 1,000 கிலோ எடையுள்ள பங்கர் - பஸ்டர் குண்டுகளை வீசி அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது.
அணு ஆயுதக் கொள்கையைக் கைவிடக் கோரி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய இரண்டு ராணுவங்களும் சேர்ந்து கடந்த பிப். 28 ஆம் தேதி முதல் தாக்குதல் நடத்தி வருகின்றன.
5-வது வாரமாக போர் தொடர்ந்து வரும் நிலையில், ஹோர்முஸ் நீரிணையைத் திறக்காவிட்டால் கடும் தாக்குதல் நடத்தப்படும் என ஈரானுக்கு அமெரிக்கா மிரட்டல் விடுத்தது.
இருப்பினும், ஈரான் தொடர்ந்து ஹோர்முஸ் நீரிணை வழியாக அனுமதி இல்லாமல் சென்றால் தாக்குதல் நடத்துவோம் எனத் தெரிவித்து வருகிறது.
இந்த நிலையில், ஹோர்முஸ் நீரிணைத் திறக்கப்படவில்லை என்றாலும், ஈரான் மீதான "ஆபரேஷன் எபிக் ப்யூரி" ராணுவ நடவடிக்கையை முடிவுக்கு கொண்டுவர டிரம்ப் விரும்புவதாக தனது உதவியாளர்களிடம் தெரிவித்ததாக தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவித்துள்ளது.
இதனிடையே, இந்திய நேரப்படி இன்று காலை 6.20 மணியளவில் டிரம்ப் தனது சமூக ஊடகப் பக்கத்தில், மிகப்பெரிய வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்படும் காணொலி ஒன்றை எதுவும் குறிப்பிடாமல் பகிர்ந்திருந்தார்.
இந்த தாக்குதலானது, ஈரானின் மிகப்பெரிய ஆயுதக் கிடங்கான இஸ்ஃபஹான் மீது நடத்தப்பட்டுள்ளதாகவும், சுமார் 1,000 கிலோ பங்கர் - பஸ்டர் குண்டுகளைப் பயன்படுத்தி அமெரிக்க விமானப் படை நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் மத்திய பகுதியில் தலைநகர் தெஹ்ரானுக்கு தெற்கில் அமைந்துள்ள இஸ்ஃபஹான் கிடங்கு, ராணுவம் மற்றும் அணுத் திட்டங்களுக்கு முக்கியப் பங்கு வகித்து வருகின்றது.
ஈரானிடம் உள்ள 540 கிலோ செறிவூட்டப்பட்ட யுரேனியம், இஸ்ஃபஹான் நகரில் நிலத்தடியில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியாக இஸ்ஃபஹான் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்தியிருக்கக் கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.