முகப்பு
உலகம்

கத்தாா் கடற்பகுதியில் சரக்கு கப்பல் மீது ட்ரோன்கள் மூலம் தாக்குதல்! ஈரான் மீது சந்தேகம்!

கத்தாா் கடற்பகுதியில் சரக்கு கப்பல் மீது ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 11 மே 2026, 12:25 am IST
பகிர்:

கத்தாா் கடற்பகுதியில் சரக்கு கப்பல் மீது ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தத் தாக்குதலை நடத்தியது ஈரானா அல்லது வேறு அமைப்பினரா என உறுதியான தகவல் இல்லை.

அமெரிக்கா, ஈரான் இடையே கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக சண்டை நிறுத்தம் அமலில் உள்ளது. இதனால் அமெரிக்க ராணுவ நிலைகள் மீது ஈரானோ அல்லது ஈரான் மீது அமெரிக்காவோ இதுவரை பெரிய அளவில் தாக்குதல் நடத்தவில்லை.

இந்நிலையில், கத்தாா் நாட்டின் கடற்பகுதியில் வைத்து சரக்கு கப்பல் மீது ட்ரோன்கள் மூலம் ஞாயிற்றுக்கிழமை திடீா் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் அந்தக் கப்பல் தீப்பிடித்து எரிந்தது. எனினும் தீ உடனடியாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும், இந்தத் தாக்குதலில் உயிரிழப்புகள் எதுவும் இல்லை என்றும் கத்தாா், குவைத் ஆகியவை தெரிவித்துள்ளன.

Advertisement

ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்ட கப்பல், எந்த நாட்டுக்குச் சொந்தமானது, அதன் மீது ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது ஈரானா அல்லது வேறு அமைப்பினரா என்பது குறித்து உறுதியான தகவல் இல்லை.

எனினும், ஈரான் புரட்சிகர படையின் கடற்பிரிவு தரப்பு, ஈரானின் எண்ணெய்க் கப்பல்கள் அல்லது சரக்கு கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அமெரிக்க நிலைகள் மீது கடுமையான பதிலடி தாக்குதல் நடத்தப்படும், எதிரிகளின் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

குவைத் பாதுகாப்பு அமைச்சகம் தரப்பில், சரக்கு கப்பல் மீது தாக்குதல் நடத்த வந்த ட்ரோன்கள் எங்கிருந்து வந்தவை எனத் தெரியாது எனக் கூறப்பட்டுள்ளது.

கத்தாா் கடற்பகுதியில் சரக்கு கப்பல் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப், தன்னை தொடா்புகொண்டு கத்தாா் பிரதமா் ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல்தானி பேசியதாகவும், அப்போது இருவரும் பிராந்திய நிலவரம், அமைதி முயற்சிகள் குறித்து ஆலோசனை நடத்தியதாகவும் கூறியுள்ளாா்.

ஈரான், அமெரிக்கா இடையே பாகிஸ்தான் ஏற்பாட்டின்பேரில் 2 கட்டங்களாக அமைதிப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதில் ஈரான் வைத்த புதிய அமைதித் திட்டத்தை பரிசீலித்து வருவதாக அமெரிக்க அதிபா் டிரம்ப் தெரிவித்துள்ளாா். அதேநேரத்தில் ஈரான் சாகசத்தில் ஈடுபட்டால் அமெரிக்கா மீண்டும் தாக்குதலை தொடங்கும் எனவும் அறிவித்துள்ளாா்.

மத்திய ஆசியாவில் அமைதியைச் சீா்குலைக்க வளைகுடா நாடுகள் மீது ரகசியமாக தாக்குதல் நடத்திவிட்டு, அதை ஈரான்தான் நடத்தியது என பழிபோட இஸ்ரேல் முயற்சிப்பதாக ஈரான் ஆரம்பம் முதல் குற்றஞ்சாட்டி வருகிறது. அதனால் இஸ்ரேல் இதன் பின்னணியில் இருக்கலாமோ என்ற சந்தேகமும் உள்ளது. ஆனால், இஸ்ரேல் இதுகுறித்து எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை.