உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக 2-வது இடத்தில் இந்தியா உள்ளது.
அமெரிக்காவில் 6.15 கோடி மக்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக இந்தியாவில் 3.58 கோடி மக்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகம் முழுவதும் கரோனா மற்றும் உருமாறிய ஒமைக்ரான் வகை தொற்று பரவி வருகிறது. இதனால் பல்வேறு நாடுகள் கட்டுப்பாடுகளை விதித்து தடுப்பூசி போடும் பணிகளை ஊக்குவித்து வருகின்றன.
இந்நிலையில், இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,68,063 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக அதிக அளவிலான மக்கள் இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அமெரிக்காவில் 4.26 கோடி மக்கள் குணமடைந்தனர். அதேபோன்று இந்தியாவில் 3.46 கோடி மக்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கரோனாவால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் 863,896 பேர் உயிரிழந்த நிலையில், இந்தியாவில் 484,359 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவில் 1.9 கோடி மக்கள் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் 9.6 லட்சம் மக்கள் கரோனாவுக்கு வீடுகளிலும், மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.