கர்நாடகத்தின் தட்சிண கன்னடாவில் பாஜக உறுப்பினர் கொடூரமாகக் கொல்லப்பட்டதற்கு அம்மாநில முதல்வர் பவராஜ் பொம்பை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தட்சிண கன்னடா மாவட்டத்தில் பாஜக யுவமோச்சா குழு உறுப்பினராக இருந்த பிரவீன் நெட்டாரு(32) நேற்றிரவு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் இருசக்கர வாகனத்தில் வந்து சரமாரியாக வெட்டிக் கொன்றனர்.
இதில் பலத்த காயமடைந்த அவரின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவர் கொண்டுசெல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் நடந்த பகுதி கேரள எல்லைக்கு அருகில் உள்ளதால் கேரள காவல்துறையினர் குற்றவாளிகளைப் பிடிக்கத் தீவிர முயற்சியை மேற்கொண்டு வருவதாக உள்துறை அமைச்சர் அர்க ஞானேந்திரா தெரிவித்தார்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்பை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,
தட்சிண கன்னடா மாவட்டத்தைச் சேர்ந்த எங்கள் கட்சித் தொண்டர் பிரவீன் நெட்டரின் கொடூரமான படுகொலை கண்டிக்கத்தக்கது.
இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டவர்கள் விரைவில் கைது செய்யப்பட்டு சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள்.
மேலும், அவரது ஆத்மா சாந்தியடையட்டும். அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தாருக்கு இறைவன் தாங்கும் சக்தியை வழங்கட்டும் என்று அவர் பதிவிட்டுள்ளார்.