ட்விட்டரை வாங்கிய பிறகு அந்த நிறுவனத்தில் வேலை செய்து வருபவர்களில் 75 சதவிகித பணியாளர்களை குறைக்க எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ட்விட்டர் நிறுவனத்தினை வாங்குவதற்காக முதலீடு செய்தவர்களிடத்தில் எலான் மஸ்க் பணியாளர்களை குறைப்பது குறித்து பேசியதாகக் கூறப்படுகிறது. அதில், தற்போது உள்ள 7500 பணியாளர்களில் 75 சதவிகிதத்தைக் குறைத்து குறைந்த அளவிலான பணியாளர்களை வைத்து நிறுவனத்தை நடத்த உள்ளதாக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சான் பிரான்சிஸ்கோவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் ட்விட்டர் நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்கள் குறைக்கப்பட உள்ளதாக வெளியான தகவல் குறித்து எலான் மஸ்க் தரப்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ட்விட்டர் நிறுவனம் ஏற்கனவே தனது நிறுவன பணியாளர்களை குறைப்பது தொடர்பாக தெரிவித்து வந்தது. இருப்பினும், 75 சதவிகித பணியாளர்களை எலான் மஸ்க் நீக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் அளவிற்கு ட்விட்டர் நிறுவனம் முடிவு செய்யவில்லை. அதேபோல எலான் மஸ்க் ஏற்கனவே ட்விட்டர் பணியாளர்கள் குறைக்கப்படுவது குறித்து பேசியிருந்தார். ஆனால், அவர் எத்தனை சதவிகிதம் என்பது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில், எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தின் 75 சதவிகித பணியாளர்களை நீக்க உள்ளதாக கூறப்படுவது முக்கியத்துவம் பெறுகிறது. இருப்பினும், இது குறித்து எந்த ஒரு அதிகாரபூர்வ தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.