வானதி சீனிவாசனின் காரை மறித்து கண்டன முழக்கம்: போலீஸ் விசாரணை
சென்னை திருவல்லிக்கேணியில் வானதி சீனிவாசன் காரை வழிமறித்து கோஷமிட்டதாக 15 பேர் மீது 3 பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
சென்னை திருவல்லிக்கேணியில் வானதி சீனிவாசன் காரை வழிமறித்து கோஷமிட்டதாக 15 பேர் மீது 3 பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
பாஜக மாநில துணைத் தலைவர் வானதி சீனிவாசனின் கார் ஓட்டுநர் கோபிசரவணன் (27). இவர், திங்கள்கிழமை காலை கோவையில் இருந்து ரயில் மூலம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்த வானதி சீனிவாசனை காரில் அழைத்துச் செல்வதற்காக வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றார்.
கார், திருவல்லிக்கேணி சுவாமி சிவானந்தா சாலையில் சென்று கொண்டிருந்தபோது, அங்கு சாலையில் நடந்து வந்து கொண்டிருந்த 15 பேர் கும்பல், திடீரென காரை வழிமறித்தது. உடனே, ஓட்டுநர் சரவணன் காரை நிறுத்தினார். அப்போது அந்தக் கும்பல், பாஜகவை கண்டித்தும், பிரதமர் மோடியைக் கண்டித்தும், குறிப்பிட்ட ஒரு அரசியல் கட்சியை வாழ்த்தியும் கோஷமிட்டனர். இதற்கிடையே அங்கு வந்த சிலர், கோஷமிட்ட கும்பலை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தது .
இதுகுறித்து சரவணன், திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார், காரை வழிமறித்து கண்டன கோஷமிட்ட 15 பேர் மீதும் 3 சட்டப்பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்குத் தொடர்பாக போலீஸார் சிலரை விசாரணைக்காக தேடி வருகின்றனர்.