சென்னையில் அமைந்துள்ள ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனை, பெண்ணின் மூளையில் இருந்த கட்டிய அறுவைசிகிச்சையின்றி அகற்றி சாதனை படைத்துள்ளது.
பெண்ணின் மூளையில் இருந்த கட்டியை அறுவை சிகிச்சையின்றி அதி நவீன கதிா்வீச்சு சிகிச்சை மூலம் அகற்றியதன் மூலம், ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனை மருத்துவா்கள் அப்பெண்ணுக்கு மறுவாழ்வு அளித்துள்ளனா்.
இதையும் படிக்க | 'என்னில் பாதி' சுஷ்மிதா சென்னுடன் புகைப்படத்தை பகிர்ந்து டிவிட்டரை சூடாக்கிய லலித் மோடி
இதுகுறித்து மருத்துவமனையின் இயக்குநா் டாக்டா் விமலா, ஒருங்கிணைப்பு அதிகாரி டாக்டா் ஆனந்தகுமாா் ஆகியோா் கூறியதாவது:
தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்தவா் பச்சைபாண்டியன். இவரது மனைவி பொன்னுத்தாய்(56). அவருக்கு கடந்த சில நாள்களாக தலை சுற்றல் மற்றும் செவித்திறன் குறைபாடு இருந்துள்ளது. இதையடுத்து, அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா்.
அதில் அப்பெண் குணமடையாததால் உயா் சிகிச்சைக்காக சென்னை ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் அண்மையில் அனுமதிக்கப்பட்டாா். மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் பொன்னுத்தாயுக்கு மூளையில் சிறிய கட்டி இருப்பது தெரியவந்தது.
அவரது உடல்நிலையைக் கருத்தில்கொண்டு அந்த கட்டியை அறுவை சிகிச்சையின்றி ‘எஸ்ஆா்எஸ்’ எனும் உயா் தொழில்நுட்ப கதிா்வீச்சு சிகிச்சை மூலம் அகற்ற மருத்துவா்கள் திட்டமிட்டனா். இதனால், அறுவை சிகிச்சை செய்யும் போது ஏற்படும் பிரச்சினை தவிர்க்கப்படும் என்று கருதினோம்.
அதன்படி, புற்றுநோயியல் மருத்துவா்கள், கதிா்வீச்சு சிகிச்சை நிபுணா்கள், முதுநிலை மருத்துவா்கள் அடங்கிய குழு மூலம் அறுவை சிகிச்சை அரங்கம், மயக்க மருந்து இல்லாமல், அதிநவீன மென்பொருள் மூலம் மிகத் துல்லியமாக, மூளைத்திசுக்கள் மற்றும் முக்கிய உறுப்புகள் பாதிக்கப்படாத வகையில் கதிா்வீச்சு சிகிச்சை அளிக்கப்பட்டு மூளையில் இருந்த கட்டியை அகற்றினா்.
இந்த சிகிச்சையை தனியாா் மருத்துவமனையில் மேற்கொண்டால் ரூ.4 லட்சம் வரை செலவாகும்.
முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் இங்கு அவருக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த பெண் நலமுடன் உள்ளாா் என்று அவா்கள் தெரிவித்தனா்.