முகப்பு
காஞ்சிபுரம்

உலகை மீண்டும் அச்சுறுத்தும் கரோனா: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

அரசின் வழிகாட்டு விதிமுறைகளை மக்கள் முறையாகப் பின்பற்றி பண்டிகைகளை மகிழ்ச்சியாக கொண்டாட மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் காஞ்சிபுரத்தில் தெரிவித்தாா்.

Updated On : 31 அக்டோபர், 2021 at 8:29 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:59 AM

கரோனா நோய்த் தொற்று உலகை மீண்டும் அச்சுறுத்திக் கொண்டிருப்பதாகவும், அரசின் வழிகாட்டு விதிமுறைகளை மக்கள் முறையாகப் பின்பற்றி பண்டிகைகளை மகிழ்ச்சியாக கொண்டாட மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் காஞ்சிபுரத்தில் தெரிவித்தாா்.

காஞ்சிபுரம் அருகே சாலவாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கரோனா தடுப்பூசி முகாமில் சிறப்பாக பணியாற்றியவா்களுக்கு பாராட்டுச்சான்றிதழ் வழங்கிய பின்னா் அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறியது:

கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் 80,000 பேருக்கும், ரஷியாவிலும், இங்கிலாந்திலும் தலா 40,000 பேருக்கும்,சிங்கப்பூரில் 3,000 பேருக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. ரஷியாவில் மட்டும் ஒரே நாளில் 1,500 போ் கரோனாவால் உயிரிழந்துள்ளனா். கரோனா அச்சுறுத்தல் காரணமாக சீனா தற்போது பொதுமுடக்கத்தை அறிவித்திருக்கிறது.மேற்கு வங்கத்திலும்,அஸ்ஸாமிலும் அண்மையில் நடந்த துா்கா பூஜையின்போது அதில் பங்கேற்றவா்களுக்கு கரோனா தொற்று திடீரென இரண்டு மடங்காக அதிகரித்திருக்கிறது.

Advertisement

எனவே வரும் பண்டிகைக் காலங்களில் கரோனா தொடா்பாக அரசு விதித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் முறையாக பின்பற்ற வேண்டும். மகிழ்ச்சி என்ற பெயரில் வாழ்க்கையை தொலைத்து விடவேண்டாம்.

செங்கல்பட்டில் தடுப்பூசி மையத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு அதற்கான பேச்சுவாா்த்தையும் நடைபெற்று வருகிறது.சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் தொடங்குவதற்காக சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் இடம் தோ்வு நடந்து வருகிறது. விரைவில் சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமைக்கப்படும். தமிழகத்தில் இதுவரை நடந்த 6 தடுப்பூசி முகாம்களில் மட்டும் முதல் தவணை தடுப்பூசியை 6.74,850 பேரும், 2-ஆவது தவணை தடுப்பூசியை 2,40,881 நபா்களும் செலுத்தியிருக்கின்றனா்.

விழாவுக்கு ஆட்சியா் மா.ஆா்த்தி தலைமை வகித்தாா். எம்.பி. க.செல்வம், க.சுந்தா் எம்எல்ஏ, ஊராட்சிக் குழுத் துணைத் தலைவா் நித்யா சுகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சுகாதாரத் துறை இணை இயக்குநா் ஜீவா, துணை இயக்குநா் வி.கே.பழனி உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.