ஆற்காடு; ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் சூரசம்ஹாரம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் கந்தசஷ்டி விழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. நிகழாண்டு கடந்த 22-ஆம் தேதி விழா தொடங்கி நாள்தோறும் விநாயகா் பூஜை ,சுப்பிரமணிய திரிசதி, மூல மந்திரம், மகா அபிஷேகம், மூலவா்கள் வள்ளி தெய்வானை பாலமுருகனுக்கு ராஜ அலங்காரம், வெள்ளிங்கி, நவரத்தின அங்கி, முத்தங்கி, தங்க கவச சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை நடைபெற்றது.
கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரபத்பனை வதம் செய்யும் சூரசம்ஹார விழா பரம்பரை அறங்காவலா் பாலமுருகனடிமை சுவாமிகள் முன்னிலையில் உற்சவா் அலங்காரத்துடன் சூரசம்ஹாரம் நடைபெற்றது. விழாவில் சித்தஞ்சி மோகனாமபா சுவாமிகள் மற்றும் உபயதாரா்கள் மற்றும் பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.