பொன்னேரியில் நடந்துசென்று மக்களிடம் மனுக்களைப் பெற்ற முதல்வர் ஸ்டாலின்!
பொன்னேரியில் நடந்துசென்று மக்களிடம் மனுக்களைப் பெற்ற முதல்வர் ஸ்டாலின்..
பொன்னேரியில் நடைபெறும் அரசு விழாவுக்குச் சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சாலையில் நடந்துசென்று மக்களிடம் மனுக்களைப் பெற்றார்.
திருவள்ளூர் மாவட்டத்துக்கு உள்பட்ட சோழவரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஆண்டார்குப்பம் கிராமத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்குதல், பல்வேறு பணிகள் தொடங்கி வைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, சிறப்புரையாற்றுகிறார்.
விழாவில் முதல்வர் பங்கேற்று 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு ரூ.1000 கோடிக்கு மேற்பட்ட பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்குகிறார். அதில் 63 ஆயிரம் பேருக்கு இலவச பட்டாக்கள் வழங்கப்படவுள்ளன.
இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக இன்று காலை கார் மூலம் பொன்னேரி சென்ற முதல்வருக்கு திமுக தொண்டர்களும் மக்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
காரில் இருந்து இறங்கி சாலையில் நடந்து சென்று மக்களின் வரவேற்பை ஏற்ற முதல்வர் ஸ்டாலின், அவர்களின் கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.
தொடர்ந்து, விழா நடைபெறும் மேடைக்குச் சென்று நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றவுள்ளார்.