பவானியில் இந்திய கம்யூ. மறியல்
தமிழக அரசின் உரிமைகளை பறிக்கும் மத்திய அரசின் அனைத்து நடவடிக்கைகளையும் கண்டித்து பவானியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
தமிழக அரசின் உரிமைகளை பறிக்கும் மத்திய அரசின் அனைத்து நடவடிக்கைகளையும் கண்டித்து பவானியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
அந்தியூர் மேட்டூர் பிரிவில் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு கட்சியின் பவானி நகர செயலாளர் ப.மா.பாலமுருகன், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் எஸ்.கந்தசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். கோரிக்கைகளை விளக்கி கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் டி.ஏ.மாதேஸ்வரன், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் வழக்கறிஞர் ப.பா.மோகன் ஆகியோர் பேசினர்.
விவசாயத்தை அழிக்கும் வேளாண்மைச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் புதிய கல்விக் கொள்கை, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்வதை நிறுத்த வேண்டும். சிறு குறுந் தொழில்களை பாதுகாத்திட வேண்டும். மாநில அரசுக்கு வழங்க வேண்டிய கரோனா மற்றும் ஜிஎஸ்டி நிதியினை உடனே வழங்க வேண்டுவது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
பவானி வட்டார கைத்தறி, ஜமக்காளம், பெட்சீட் நெசவாளர் மற்றும் சாயத் தொழிலாளர் சங்கச் செயலாளர் வ.சித்தையன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.