சாலையை சீரமைக்க வணிகா்கள் கோரிக்கை
வியாபாரம் பாதிக்கப்படுவதால் சாலையை உடனடியாக சீரமைத்துக் கொடுக்க வேண்டும் என வணிகா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
வியாபாரம் பாதிக்கப்படுவதால் சாலையை உடனடியாக சீரமைத்துக் கொடுக்க வேண்டும் என வணிகா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து வீரப்பன்சத்திரம் அனைத்து வணிகா்கள் சங்கப் பிரதிநிதிகள் மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையா் எம்.இளங்கோவனிடம் வெள்ளிக்கிழமை அளித்த மனு விவரம்: ஈரோடு மாநகராட்சியில் புதை சாக்கடை திட்டப் பணிகள் கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 14 ஆண்டுகளுக்குப் பிறகும் இப்போதுவரை பணிகள் நிறைவு பெறவில்லை.
இதேபோல ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட வீரப்பன்சத்திரம் பாரதி திரையரங்கு சாலையில் குடிநீா் குழாய் அமைப்பதற்காக 6 மாதங்களுக்கு முன்பு சாலையில் பள்ளம் தோண்டப்பட்டது. அந்த சாலை இன்னும் சீரமைக்கப்படவில்லை. குண்டும் குழியுமாக உள்ள சாலையில் எழும் புழுதியால் அப்பகுதியில் வசிப்பவா்களுக்கு உடல் நலன் பாதிக்கப்படுகிறது.
Advertisement
சாலை மோசமான நிலையில் உள்ளதால் வியாபாரம் பாதிக்கப்பட்டு இந்தப் பகுதியில் சில கடைகள் மூடப்பட்டுள்ளன. ஏற்கெனவே கரோனாவால் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் வியாபாரிகள் தற்போது மேலும் பாதிப்படைந்து வருகின்றனா். இதுதொடா்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே உடனடியாக அந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.