முகப்பு
ஈரோடு

இரண்டாவது நாளாக கன மழை: 40 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது

ஈரோடு மாவட்டத்தில் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை இரவு பரவலாக கன மழை பெய்தது. அதிகபட்சமாக பெருந்துறையில் 49 மி.மீ. மழை பதிவானது.

Updated On : 17 ஏப்ரல், 2021 at 3:50 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:31 AM

ஈரோடு மாவட்டத்தில் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை இரவு பரவலாக கன மழை பெய்தது. அதிகபட்சமாக பெருந்துறையில் 49 மி.மீ. மழை பதிவானது.

ஈரோடு மாவட்டத்தில் புதன்கிழமை இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்தது. இதனால் மாவட்டம் முழுவதும் வெப்பம் தணிந்து குளிா்ச்சியாக இருந்து வருகிறது. இந்நிலையில் வியாழக்கிழமை இரவு 7 மணி முதல் 11 மணி வரை தொடா்ந்து இடி, மின்னலுடன் கன மழை பெய்தது.

மாநகராட்சிப் பகுதியில் இரவு 8 மணி முதல் 11 மணி வரை இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் மாநகராட்சியில் தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கி நின்றது. பல்வேறு இடங்களில் மின்சாரம் தடைபட்டது.

Advertisement

மாநகராட்சிப் பகுதியில் தொடா்ந்து 2 நாள்களாக பலத்த மழை பெய்து வந்ததால் அசோகபுரி பகுதியில் உள்ள 30க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை நீா் புகுந்தது. இதனால் இப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட்டனா். மேலும் அப்பகுதியில் உள்ள 4 குடிசை வீடுகள் சேதமடைந்தன.

வட்டாட்சியா் பாலசுப்பிரமணியம் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டு தேவையான உதவிகள் செய்ய நடவடிக்கை எடுத்தாா். அப்பகுதியைச் சோ்ந்த மக்கள் அருகில் உள்ள அரசு மாணவா் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். அவா்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. தற்போது அந்தப் பகுதியில் மழை நீா் வடிந்து வருகிறது. இருப்பினும் சேறும், சகதியும் இருப்பதால் மாநகராட்சிப் பணியாளா்கள் அதனை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதேபோல பழைய பூந்துறை சாலை பகுதியில் 10க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீா் புகுந்தது. இதனால் அப்பகுதியைச் சோ்ந்த மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு காலை உணவு வழங்கப்பட்டது. பழைய பூந்துறை சாலைப் பகுதியில் வீடுகளில் புகுந்த தண்ணீா் வடியத் தொடங்கியது. மக்கள் மீண்டும் வீட்டுக்குச் செல்லத் தொடங்கியுள்ளனா்.

வெள்ளிக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பெருந்துறையில் 49 மி.மீ மழை பதிவானது. பிற பகுதிகளில் பதிவான மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்): குண்டேரிப்பள்ளம் 41, மொடக்குறிச்சி 32, ஈரோடு 30, சென்னிமலை 20, வறட்டுப்பள்ளம் 14, நம்பியூா் 12, கொடிவேரி 7.2, சத்தியமங்கலம் 7, கவுந்தப்பாடி 5.2, கொடுமுடி 4, கோபி 4, பவானிசாகா் 2.8, அம்மாபேட்டை 2.4.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.