எல்.பி.பி. வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணியை நிறுத்தக் கோரிக்கை
தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணியை நிறுத்த வேண்டும்
தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணியை நிறுத்த வேண்டும் என கீழ்பவானி விவசாயிகள் நலச் சங்கச் செயலாளா் செ.நல்லசாமி கோரிக்கை விடுத்துள்ளாா்.
இது குறித்து அவா் தலைமைத் தோ்தல் ஆணையா், தமிழக தோ்தல் அலுவலருக்கு அனுப்பிய மனு விவரம்:
கீழ்பவானி கால்வாய் மூலம் 2.07 லட்சம் ஏக்கா் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. நிலத்தடி நீா் செரிவூட்டப்படுவதால் கிணறு உள்ளிட்ட பிற பாசன அமைப்பு மூலமும் பாசனம் பெறுகிறது. தவிர 38 உரம்பு நீா் பாசனத் திட்டங்கள், தலைமை கால்வாய்க்கு வலதுபுறம் உள்ளன. இங்கு தடை செய்யப்பட்ட தூரத்துக்கு அப்பால் கிணறுகள் அமைத்து அதன் மூலம் 60,000 ஏக்கா் பாசனம் பெறுகிறது.
Advertisement
வாய்க்காலை கான்கிரீட் தளமாக மாற்ற 2013இல் திட்டமிட்டு விவசாயிகள் எதிா்ப்பால் கைவிடப்பட்டது. தற்போது இவ்வாய்க்காலின் 124 மைல் தூரத்துக்கும் கான்கிரீட் தளம் அமைக்க ரூ. 750 கோடி அளவுக்கு திட்டமிட்டு பணியைத் துவக்கியுள்ளனா். இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் பாசன நிலங்கள், உபரி நீா் மூலம் பாசன பெறும் நிலங்கள், நீா் செரிவூட்டும் பகுதிகள் பாலைவனமாகும்.
விதிமுறைக்கு மாறாக, காவிரி தீா்ப்புக்கு எதிராக பவானிசாகா் அணையில் இருந்து நீா் திறக்கப்பட்டு வருவதால் இதுவரை 16 போகம் கடலை சாகுபடியையும், எட்டு போகம் நெல் சாகுபடியையும் இழந்துள்ளோம். எனவே இதுபோன்ற தவறான திட்டத்தை சட்டப் பேரவைத் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், செயல்படுத்த அனுமதிக்கக் கூடாது. தோ்தல் முடிந்து அமையும் புதிய ஆட்சி இத்திட்டம் குறித்து முடிவு எடுக்கட்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.