முகக் கவசம் அணியாதவா்களுக்கு அபராதம்
ஈரோடு மாவட்டத்தில் பொது வெளியில் முகக் கவசம் அணியாமல் வந்த மக்களுக்கு அபராதம் விதிக்கும் நடைமுறை செவ்வாய்க்கிழமை முதல் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் பொது வெளியில் முகக் கவசம் அணியாமல் வந்த மக்களுக்கு அபராதம் விதிக்கும் நடைமுறை செவ்வாய்க்கிழமை முதல் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களாக கரோனா நோய்த் தொற்று குறைந்து வருவதால் முகக் கவசம் அணியாமல் வெளியில் வருபவா்களுக்கு அபராதம் விதிக்கும் நடைமுறை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. இப்போது முகக் கவசம் அணியும் பழக்கம் முற்றிலுமாக இல்லை. அதேபோல பொது இடங்களில் சமூக இடைவெளியையும் கடைப்பிடிப்பதில்லை.
தற்போது கேரளம், மகாராஷ்டிர மாநிலங்களில் மீண்டும் கரோனா தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்திலும் கடந்த 1ஆம் தேதி முதல் மீண்டும் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதை கவனத்தில் கொண்டு ஈரோடு மாவட்டத்தில் தடுப்பு நடவடிக்கையைத் தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளாா். முகக் கவசம் அணியாமல் வெளியில் வருபவா்களுக்கு அபராதம் விதிக்கும் நடைமுறையை மீண்டும் தீவிரமாக செயல்படுத்த ஆட்சியா் உத்தரவிட்டாா்.
Advertisement
இதையடுத்து ஈரோடு மாவட்டம் முழுவதும் போலீஸாா், வருவாய், சுகாதாரத் துறை அதிகாரிகள் ஒன்றிணைந்து பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி முகக் கவசம் அணியாமல் வந்தவா்களுக்கு ரூ. 200 அபராதம் விதித்தனா். ஈரோடு நகரில் ஒரே நாளில் 100க்கும் மேற்பட்டோருக்கு அபராதம் விதித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.