திருப்பூர்: திருப்பூரை அடுத்த பொல்லிகாளிபாளையம் பகுதியில் புதிய பள்ளிக் கட்டடம் திறக்கப்படாமல் மாணவர்கள் வெளியில் அமர வைத்து பாடம் நடத்துவதால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருப்பூர் தாராபுரம் சாலை பொல்லிகாளிபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பள்ளியில் பழைய கட்டடம் மிகவும் சிதிலமடைந்தது. இதனையடுத்து, புதிதாக அரசு பள்ளிக்கு கட்டடம் கட்டப்பட்டு அனைத்து பணிகளும் முடிவடைந்து உள்ளது. எனினும் பள்ளி கட்டடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வராத நிலையில், மாணவ மாணவிகளை மரத்தடி நிழலில் அமர வைத்து வகுப்பு நடைபெறுவதாகவும், வெயில் காரணமாக மாணவர்கள் மயக்கம் அடைந்து கீழே விழுந்ததால் ஆத்திரமடைந்த பெற்றோர் மாணவ, மாணவிகள் உடன் திருப்பூர் தாராபுரம் பிரதான சாலையின் குறுக்கே இருபுறமும் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து சென்ற அவிநாசி பாளையம் காவல்துறையினர் கல்வி அதிகாரிகளிடம் பேசி விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து பெற்றோர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த மறியல் காரணமாக திருப்பூர்-தாராபுரம் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.