பாஜகவின் வெற்றிவேல் யாத்திரை பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் வெற்றிவேல் யாத்திரை நிகழ்ச்சியை நடத்த பாஜக மாநில தலைவர் எல்.முருகன் திட்டமிட்டார். கடந்த 5-ஆம் தேதி திருத்தணியில் யாத்திரை தொடங்க இருந்த நிலையில் தமிழக அரசு அதற்கு தடை விதித்தது. அதனை மீறி யாத்திரையில் பங்கேற்றவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். இருப்பினும் மாவட்ட வாரியாக தடையை மீறி யாத்திரை பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் நாமக்கல் பூங்கா சாலையில் வியாழக்கிழமை பிற்பகல் 4 மணியளவில் யாத்திரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக மாநில துணைத்தலைவர்கள் வி.பி. துரைசாமி, அண்ணாமலை, யாத்திரை நிகழ்வு இணை பொறுப்பாளர் கோபிநாத் ஆகியோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர். பாஜகவின் வெற்றிவேல் யாத்திரை மாவட்ட வாரியாக நடைபெற்று வருகிறது.
மத்தியில் ஆளும் பாஜக அரசின் சாதனைகளையும், இந்துக்களின் எழுச்சியைக் காட்டுவதற்காகவும், மத்திய அரசின் பல்வேறு நலத் திட்டங்களை மக்கள் அறிந்து கொள்ளவுமே யாத்திரை கூட்டம் நடைபெறுவதாக கூட்டத்தில் தெரிவித்தனர். இக்கூட்டத்தில் பாஜக மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். தடையை மீறி யாத்திரை பொதுக்கூட்டம் நடைபெற்றதால் அதில் பங்கேற்ற நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.