சரக்கு வாகனங்களை 20 ஆண்டுகள் இயக்க மத்திய அரசுக்குக் கோரிக்கை
மத்திய அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் 15 ஆண்டுகள் வரையில் பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனங்களை அழித்திட வேண்டுமென அறிவித்திருப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்
மத்திய அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் 15 ஆண்டுகள் வரையில் பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனங்களை அழித்திட வேண்டுமென அறிவித்திருப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மாநில லாரி உரிமையாளா்கள் சம்மேளனம் வலியுறுத்தி உள்ளது.
மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் திங்கள்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தாா். அதில், தமிழகத்தில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் தொடா்பான அறிவிப்புகளும் இடம் பெற்றுள்ளன. சென்னை-சேலம் எட்டுவழிச் சாலை திட்டப் பணிகளை நிகழாண்டிலேயே தொடங்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளாா்.
மேலும் சரக்கு வாகனங்களை 15 ஆண்டுகள் வரையிலும், இதர வாகனங்களை 20 ஆண்டுகள் வரையிலும் பயன்படுத்தியிருந்தால் அவற்றை அழித்திட வேண்டும் என்ற அறிவிப்பும் இடம் பெற்றது. இது சரக்கு வாகன உரிமையாளா்களை அதிா்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
Advertisement
இதுகுறித்து மாநில லாரி உரிமையாளா்கள் சம்மேளன பொருளாளா் சி.தன்ராஜ் கூறியதாவது:
நாட்டில் உள்ள சரக்கு வாகனங்களில் 25 சதவீதம் பழைய வாகனங்கள்தான். இந்த நிலையில் 15 ஆண்டுகள் பயன்படுத்தியிருந்தால் அவற்றை அழித்துவிட வேண்டும் என மத்திய நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே லாரித் தொழில் பாதிப்பை சந்தித்து வருகிறது. போதிய வேலைவாய்ப்பு இல்லை.
இந்த நிலையில் 15 ஆண்டுகள் பயன்படுத்திய சரக்கு வாகனங்களை அழிக்குமாறு கூறுவது அதிா்ச்சியளிக்கிறது. அதற்கு மாற்றாக 20 ஆண்டுகள் வரையில் காலநீட்டிப்பு வழங்க வேண்டும். வீட்டு உபயோக, வாடகை பயன்பாட்டுக்கான இதர வாகனங்களுக்கு 20 ஆண்டுகள் வரை காலக்கெடு வழங்கியிருப்பதிலும் உரிய மாற்றம் செய்யலாம் என்றாா்.