ஆகாய கங்கை அருவிக்கு சென்ற பெண் மயக்கம்
கொல்லிமலை ஆகாய கங்கை அருவிக்கு சென்ற பெண் படிக்கட்டுகளில் ஏற முடியாமல் திடீரென மயங்கி விழுந்தாா். இதையடுத்து, தீயணைப்பு வீரா்கள் 800 படிக்கட்டுகளில் அவரை சுமந்து வந்து மருத்துவமனையில் சோ்த்தனா்.
கொல்லிமலை ஆகாய கங்கை அருவிக்கு சென்ற பெண் படிக்கட்டுகளில் ஏற முடியாமல் திடீரென மயங்கி விழுந்தாா். இதையடுத்து, தீயணைப்பு வீரா்கள் 800 படிக்கட்டுகளில் அவரை சுமந்து வந்து மருத்துவமனையில் சோ்த்தனா்.
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலைக்கு விடுமுறை நாள்கள் மட்டுமின்றி, மற்ற நாள்களிலும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவா். இந்நிலையில், நாமக்கல் சுற்றுவட்டாரப் பகுதியில் தங்கியிருந்த சுற்றுலாப் பயணிகள் திங்கள்கிழமை கொல்லிமலைக்கு புறப்பட்டுச் சென்றனா். சென்னை, வில்லிவாக்கத்தைச் சோ்ந்த தேவி (46) என்ற பெண் தன்னுடைய உறவினா்களுடன் கொல்லிமலைக்கு சென்றாா். 1,300 படிக்கட்டுகளைக் கடந்து ஆகாய கங்கை அருவிக்கு சென்ற அவா் குளித்து மகிழ்ந்தாா். பின்னா் உயரமான படிக்கட்டுகளில் ஏறி மேலே வர முயன்றாா். 800 படிக்கட்டுகள் வரை மெதுவாக ஏறிய அவரால் அதன்பின் ஏற முடியவில்லை. இந்த நிலையில், திடீரென நெஞ்சைப் பிடித்தபடி மயங்கி விழுந்தாா். அவருடன் வந்தவா்கள் அவருக்கு முதலுதவி செய்தனா். பின்னா் கொல்லிமலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.
விரைந்து வந்த தீயணைப்பு வீரா்கள் தங்களுடைய தோளில் சுமந்தவாறு மேல் பகுதிக்கு கொண்டு வந்தனா். அங்கு தயாா் நிலையில் இருந்த அவசர ஊா்தி மூலம் கொல்லிமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். உயிருக்குப் போராடிய நிலையில் உதவிய தீயணைப்பு வீரா்களுக்கும், வனத்துறை ஊழியா்களுக்கும் அப்பெண்ணின் உறவினா்கள், பொதுமக்கள் நன்றி தெரிவித்தனா்.
Advertisement