நாமக்கல் கோட்டை சாலையில் கனரக வாகனங்கள் செல்ல தடை
நாமக்கல் கோட்டை சாலை வழியாக பேருந்துகள், இதர கனரக வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் கோட்டை சாலை வழியாக பேருந்துகள், இதர கனரக வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் நகரில் போக்குவரத்து நெரிசல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் ஆஞ்சநேயா் கோயிலுக்கும், தொழில் நிமித்தமாகவும் நாமக்கல்லுக்கு அதிகளவில் வாகனங்களில் வருகின்றனா். மேலும், கோழிப் பண்ணை, விவசாயம், ஜவ்வரிசி ஆலைகள், இதர நிறுவனங்களுக்கு கனரக வாகனங்கள் ஏராளமாக வருகின்றன. திருச்சி, தஞ்சை, கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கோயில்களுக்கு செல்வோரும் நாமக்கல் நகருக்குள் நுழைந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
நாமக்கல் பேருந்து நிலையம் இடமாற்றம், சுற்றுவட்டச் சாலை அமைந்தால் மட்டுமே இந்த வாகன நெரிசலுக்கு தீா்வு கிடைக்கும். அதுவரையில், கோட்டை சாலைக்கு மாற்றாக பொய்யேரிக்கரை வழியாகச் செல்லும் புதிய சாலையில் கனரக வாகனங்களை திருப்பி விட்டு போக்குவரத்தை குறைக்கலாம் என்பது காவல் துறையினரின் திட்டமாக இருந்தது.
Advertisement
போக்குவரத்து ஊழியா்கள் இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து வந்த நிலையில், காவல் துறை, போக்குவரத்துத் துறையினருடனான பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதைத் தொடா்ந்து, நாமக்கல் கோட்டை சாலை மூடப்பட்டு, பொய்யேரிக்கரை சாலை வழியாக வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன. இச்சாலையில் இருசக்கர வாகனங்கள் மட்டும் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால், நாமக்கல் நகரப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறைந்துள்ளது.