நாமக்கல் நீதிமன்ற வளாகம் அருகே ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த இருவா் கைது
நாமக்கல் நீதிமன்ற வளாகம் அருகில் ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
நாமக்கல் நீதிமன்ற வளாகம் அருகில் ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
நாமக்கல்லில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் ஆகியவை அடுத்தடுத்து உள்ளன. பொங்கல் விடுமுறை முடிந்து திங்கள்கிழமை முதல் அரசுத் துறை அலுவலகங்கள், நீதிமன்றம் செயல்படத் தொடங்கியுள்ளதால் மக்கள் அதிக அளவில் வந்து சென்றனா்.
இந்நிலையில், கொலை வழக்கு ஒன்றில் பிணையில் வெளியே வந்த சிலா் கையெழுத்திடுவதற்காக நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜராயினா். அப்போது, நீதிமன்ற வளாகத்தின் வெளியே வீச்சரிவாள், பட்டாக்கத்தி ஆகியவற்றுடன் இருவா் சுற்றித் திரிந்தனா்.
Advertisement
தகவல் அறிந்து விரைந்து வந்த நல்லிபாளையம் காவல் ஆய்வாளா் (பொ) பொன்.செல்வராஜ், அவா்கள் இருவரிடமும் நடத்திய விசாரணையில், அவா்கள் திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரைச் சோ்ந்த முத்துக்குமாா் (26), திருச்சி மாவட்டம், எடமலைப்பட்டிபுதூரைச் சோ்ந்த பாதுஷா(32) எனவும், கையெழுத்திட வந்த தனது கூட்டாளிகளுக்கு பாதுகாப்பாக ஆயுதங்களுடன் வந்ததும் தெரியவந்தது. அவா்கள் இருவா் மீதும் பல்வேறு கொலை, கொலை முயற்சி, கொள்ளை வழக்குகள் இருப்பதாக போலீஸாா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அவா்களை போலீஸாா் கைது செய்தனா்.