நாமக்கல் ஆட்சியரகம் முன் கொளுத்தும் வெயிலில் மாற்றுத்திறனாளிகள் போராட்டம்
நாமக்கல் ஆட்சியர் அலுவலகம் முன்பாக கொளுத்தும் வெயிலில் மாற்றுத்திறனாளிகள் திங்கள்கிழமை காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாமக்கல்: நாமக்கல் ஆட்சியர் அலுவலகம் முன்பாக கொளுத்தும் வெயிலில் மாற்றுத்திறனாளிகள் திங்கள்கிழமை காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் தரைத்தளத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் செயல்பட்டு வந்தது. இதற்கிடையே ஆட்சியர் அலுவலக வளாகத்தின் பின்புறம் கூடுதல் கட்டடம் கட்டப்பட்டது.
இதனையடுத்து மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் இந்த கட்டடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது. விநாயக மாற்றுத்திறனாளிகள் நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டிய நெருக்கடியான சூழல் ஏற்பட்டது. மாற்றுத்திறனாளி பெண்களும், சிறுவர்களும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். இது தொடர்பாக பலமுறை மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு சென்றும் அலுவலகம் இடமாற்றம் செய்யப்படவில்லை. இதனைத் தொடர்ந்து திங்கள் கிழமை காலை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அலுவலகத்தை பழைய இடத்திற்கு இடமாற்றம் செய்யக்கோரி போராட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.