நாமக்கலில் மாற்றுத் திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்
நாமக்கல்லில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் காது கேளாதோர் மற்றும் வாய் பேசமுடியாத மாற்றுத்திறனாளிகள் வெள்ளிக்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல்: நாமக்கல்லில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் காது கேளாதோர் மற்றும் வாய் பேசமுடியாத மாற்றுத்திறனாளிகள் வெள்ளிக்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தின் போது, அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புகளில் ஒரு சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும். வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள தங்களுக்கு தொகுப்பு வீடு வழங்கிட வேண்டும். ஓட்டுநர் உரிமம் வழங்கும் முகாம் நடத்திட வேண்டும். மாதாந்திர உதவி தொகை ரூ.3000 ஆக உயர்த்தி வழங்கிட வேண்டும். வாரிசு அடிப்படையில் காது கேளாத மாற்றுத்திறனாளிகளுக்கு பணி நியமனம் வழங்கிட வேண்டும்.
இதையும் படிக்க: ஜூன் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.44 லட்சம் கோடியாக அதிகரிப்பு!
அனைத்து கல்வி நிறுவனங்களிலும் அனுபவமிக்க செய்கை மொழி ஆசிரியர்கள் பணியமர்த்த பெற வேண்டும். மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகங்களில் அனுபவ சைகை மொழி பெயர்ப்பாளர்கள் நியமனம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு நாமக்கல் மாவட்ட காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதவர் முன்னேற்ற சங்கத்தினர் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தின் போது வாய் பேச முடியாதோர் விசில் ஊதியும், சைகை மொழி மூலம் தங்களுடைய கோரிக்கைகளை வெளிப்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பெண் ஒருவர் மயக்கமடைந்தார். உடனடியாக அவரை மீட்ட காவல்துறையினர் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் வருவாய் கோட்டாட்சியர் த.மஞ்சுளா, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் முருகேசன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் அவர்கள் போராட்டத்தை கைவிடாமல் தொடர்ந்தனர்.