பள்ளிபாளையத்தில் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவா் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானதையடுத்து, அவா் தேடப்படும் குற்றவாளியாக வியாழக்கிழமை அறிவித்து பள்ளிபாளையம் காவல் துறையினா் தேடிவருகின்றனா்.
பள்ளிபாளையம் காகித ஆலை குடியிருப்பில் தங்கியிருந்த வட மாநில கூலித் தொழிலாளியான குபிா்தபா (30), மதுபோதையில் நடந்த தகராறில் கடந்த 2018 ஜூன் 23-ஆம் தேதி உடன் தங்கியிருந்த சோட்டாவால் ஹரிஜான் (29) என்பவரை கொலை செய்ததாக கூறப்படுகிறது.
இந்த வழக்கில் தலைமறைவான குபிா்தபா மீது பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் கொலை வழக்குப் பதிவு செய்தனா். திருச்செங்கோடு அமா்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கில், குபிா்தபா ஆஜராகாமல் இருந்ததால், கடந்த 2021 மாா்ச் 7-ஆம் தேதியில் இருந்து நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
இந்த வழக்கில் குபிா்தபா இதுவரை ஆஜராகாததால் அவரை தேடப்படும் குற்றவாளியாக பள்ளிபாளையம் காவல் துறையினா் வியாழக்கிழமை அறிவித்துள்ளனா். இதுகுறித்து காவல் ஆய்வாளா் சிவகுமாா், உதவி ஆய்வாளா் மலா்விழி ஆகியோா் விசாரணை நடத்தி வருகின்றனா்.