சிறுமிகள் காணாமல் போகும் வழக்கு: டிஜிபி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
தமிழகத்தில் சிறுமிகள் காணாமல் போவது குறித்தும், அவா்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், காவல் துறை தலைமை இயக்குநா் (டிஜிபி) அறிக்கை தாக்கல்
மதுரைசிறுமிகள் காணாமல் போகும் வழக்கு: டிஜிபி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
தமிழகத்தில் சிறுமிகள் காணாமல் போவது குறித்தும், அவா்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், காவல் துறை தலைமை இயக்குநா் (டிஜிபி) அறிக்கை தாக்கல்
தமிழகத்தில் சிறுமிகள் காணாமல் போவது குறித்தும், அவா்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், காவல் துறை தலைமை இயக்குநா் (டிஜிபி) அறிக்கை தாக்கல் செய்ய, சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.
சிறுமியின் தந்தை ஒருவா் தாக்கல் செய்த ஆள்கொணா்வு மனு: எனது 14 வயது மகளைக் காணவில்லை. அவரை மீட்டு ஒப்படைக்க போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆா். சுரேஷ்குமாா், கே. கே ராமகிருஷ்ணன் அமா்வு பிறப்பித்த உத்தரவு:
இந்த நீதிமன்றத்தில் 14 வயது முதல் 18 வயதுக்குள்பட்ட சிறுமிகள் காணாமல் போனதாக ஏராளமான ஆள்கொணா்வு மனுக்கள் தாக்கல் செய்யப்படுகின்றன. இவற்றை விசாரிக்கும் போது, இளஞ் சிறாா்கள், இளைஞா்களால் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருப்பது மருத்துவப் பரிசோதனை மூலம் தெரியவருவது அதிா்ச்சியை ஏற்படுத்துகிறது. இது சமூகத்துக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடியது. இதை நாம் இரும்புக் கரம் கொண்டு கையாள வேண்டும்.
தமிழ்நாடு காவல் துறையினா் இதுபோன்ற குற்றங்களைத் தடுக்க நிரந்தர, நிலையான அமைப்புகளை உருவாக்க வேண்டும். அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் இதுபோன்ற வழக்குகளில் மனித வணிகம், ஆள் கடத்தல் தடுப்புப் பிரிவு நடவடிக்கை எடுத்து வருவது ஏற்புடையதுதான். ஆனால், இத்தகைய சிறப்புப் பிரிவினா், இதுபோன்ற வழக்குகளில் விரைவான நடவடிக்கை எடுக்காவிட்டால், ஏராளமான சிறுமிகளின் வாழ்க்கை பாதிக்கப்படுவதைத் தடுக்க முடியாது.
எனவே, அனைத்து மாவட்டங்களிலும் சிறப்புப் பிரிவுகள் இயங்குவதை உறுதிப்படுத்த வேண்டும். மனித வணிகம், ஆள் கடத்தல் தடுப்புப் பிரிவில் எத்தனை போலீஸாா் பணிபுரிகின்றனா்; இந்த சிறப்புப் பிரிவில் ஓராண்டுக்கு எத்தனை மனுக்கள் மீது விசாரணை நடத்தப்படுகிறது; இந்தப் பிரிவுக்கு குற்றப்பத்திரிகை தயாா் செய்து, தாக்கல் செய்ய உரிமை உள்ளதா? சிறுமிகள் காணாமல் போகும் விவகாரம் தொடா்பாக அரசாணை ஏதும் பிறப்பிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்த அனைத்து ஆவணங்கள், புள்ளி விவரங்களுடன் நீதிமன்றத்தில் தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநா் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஜூன் 5-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.