தினமணி செய்தி எதிரொலி: புறவழிச் சாலை பேருந்து நிறுத்தப்பகுதியை விரிவாக்கம்
தினமணி செய்தி எதிரொலியாக, உத்தமபாளையம் பழைய புறவழிச் சாலை பேருந்து நிறுத்தப்பகுதியை விரிவாக்கம் செய்யும் பணி தொடங்கியது.
தினமணி செய்தி எதிரொலியாக, உத்தமபாளையம் பழைய புறவழிச் சாலை பேருந்து நிறுத்தப்பகுதியை விரிவாக்கம் செய்யும் பணி தொடங்கியது.
உத்தமபாளையம் வழியாக திண்டுக்கல்- குமுளி தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இப்பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் புதிய புறவழிச்சாலை அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இந்நிலையில், ஏற்கெனவே இருந்த பழைய புறவழிச்சாலை பேருந்து நிறுத்தங்களில் ஆக்கிரமிப்பு காரணமாக போக்குவரத்து நெரிசல் தொடா்ந்தது. ஆனாலும், அங்குள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் கடந்த சில நாள்களாக சாலைப்பணிகள் நடைபெற்றன. இதுகுறித்து தினமணி நாளிதழில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுவதோடு, பயணிகள் நிழற்குடையும் அமைக்க வேண்டும் என செய்தி வெளியிடப்பட்டது.
இதையடுத்து, உத்தமபாளையம் பழைய புறவழிச்சாலையை விரிவாக்கம் செய்யும் பணி தொடங்கியது. இதற்காக பயன்பாட்டில் இல்லாத 100 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கால்வாய் பாலத்தை அகற்றிவிட்டு புதிய பாலம் அமைக்கும் பணி நடைபெற்றது.
இந்த புதிய கால்வாய்பாலம் அமைக்கும் பணியால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். பாலம் வேலை காரணமாக அதன் அருகிலேயே மாற்றுப்பாதை அமைத்து போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளது.