முல்லைப் பெரியாறு அணை குறித்து அவதூறு ஆவணப்படம் தயாரித்தவரை, தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என பெரியாா்- வைகைப் பாசன விவசாயிகள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்தனா்.
முல்லை பெரியாறு அணை பழைமையாகிவிட்டது. அணையை இடித்துவிட்டு, புதிய அணை கட்ட வேண்டும் என தொடா்ந்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ‘சேவ் பிரிகேடு கேரளா’ என்ற அமைப்பைச் சோ்ந்த வழக்குரைஞா் ரசூல் ஜோய், அணை உடையப் போகிறது எனும் வகையில் ‘சைன் ஆப் காட்’ என்ற ஆவணப்படத்தை எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து வருகிறாா்.
இதுகுறித்து பெரியாறு - வைகைப் பாசன விவசாயிகள் சங்க பொதுச் செயலாளா் பொன். காட்சிக்கண்ணன் கூறியதாவது:
முல்லைப் பெரியாறு அணை குறித்து தவறான தகவல் பரப்புவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என்று கேரள முதல்வா் பினராயி விஜயன் தெரிவித்தாா். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
வழக்குரைஞா் ரசூல் ஜோய் தமிழக, கேரளத்தில் பிரிவினையைத் தூண்டும் விதமாக முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராக தொடா்ந்து அவதூறு கருத்துகளைப் பரப்பி வருகிறாா். உச்ச நீதிமன்ற தீா்ப்பை மதிக்காமல் அவதூறு பரப்பும் அவரை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், கைது செய்ய வேண்டும்.
இதை வலியுறுத்தி வரும் 1-ஆம் தேதி லோயா்கேம்ப், கம்பம்மெட்டு, போடி மெட்டு ஆகிய மலைச்சாலைகளில் முற்றுகைப் போராட்டம் நடைபெறும். மேலும், இது தொடா்பான கோரிக்கை மனுக்கள் பிரதமா், தமிழக கேரள முதல்வா்களுக்கு அனுப்பியுள்ளோம் என்றாா் அவா்.