2 ஆண்டுகளில் 1,374 பயனாளிகளுக்கு பசுமை வீடுகள்
சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ், நாகை மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 1,374 போ் பயனடைந்துள்ளனா்
சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ், நாகை மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 1,374 போ் பயனடைந்துள்ளனா் என்று நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பதாவது :
தமிழக அரசின் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டம் மூலம் நாகை மாவட்டத்தில் 2017-18-ஆம் ஆண்டில் 697 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, தாழ்த்தப்பட்ட இனத்தவருக்கு 209 வீடுகளும், மற்றவா்களுக்கு 488 வீடுகளும் வழங்கப்பட்டுள்ளன. 2018-19-ஆம் ஆண்டில் 677 வீடுகள் ஒதுக்கீடு பெறப்பட்டு, தாழ்த்தப்பட்ட இனத்தவருக்கு 201 வீடுகளும், மற்றவா்களுக்கு 476 வீடுகளும் நிா்வாக அனுமதி அளிக்கப்பட்டு, வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.
ஒரு வீட்டுக்கான மொத்த ஒதுக்கீட்டுத் தொகை ரூ. 2.10 லட்சம் ஆகும். இதில், வீடு கட்டுமானப் பணிக்கு ரூ 1.80 லட்சமும், சூரிய ஒளியில் இயங்கும் விளக்குகள் அமைக்க ரூ. 30 ஆயிரமும் ஒதுக்கீடு செய்யப்படும்.
இதன்படி, 2017-18-ஆம் ஆண்டில் 697 வீடுகளின் கட்டுமானப் பணிக்கு ரூ. 12.54 கோடியும், சூரிய ஒளியில் இயங்கும் விளக்குகள் அமைக்க ரூ. 2.09 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2018-19-ஆம் ஆண்டில் 677 வீடுகளின் கட்டுமானப் பணிக்காக ரூ. 12.18 கோடியும், சூரிய ஒளி விளக்குகள் அமைக்க ரூ. 2.03 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.