கீழையூர் அருகே பிரதாபராமபுரம் கடற்கரையில் சிறிய எல்.இ.டி. லைட் ஒளிரும் ராக்கெட் வடிவிலான மர்ம பொருள் கரை ஒதுங்கிய நிலையில், வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாகப்பட்டினம் மாவட்டம், கீழையூர் காவல் நிலையத்திற்குட்பட்ட பிரதாபராமபுரம் கடற்கரையில், இன்று (டிச. 27) அதிகாலை ராக்கெட் போன்ற வடிவமைப்புடைய மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கி இருப்பது கண்டறியப்பட்டது.
சுமார் 3½ அடி நீளமுள்ள இந்த பொருளில்,20 செ.மீ. மற்றும் 15 செ.மீ. சுற்றளவுகளைக் கொண்ட இரண்டு ஃபைபர் பைப்புகள் இணைக்கப்பட்டுள்ளன. இரண்டு பைப்புகளும் ½ அடி உயரத்தில் ஏற்ற இறக்கமாக இணைக்கப்பட்டு, இடையில் கம்பி பொருத்தப்பட்ட நிலையில் காணப்படுகிறது.
கூம்பு வடிவத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள பைப்பின் முன்பகுதியின் முனையில் சிறிய எல்.இ.டி. லைட் விட்டுவிட்டு எரியும் வகையில் பொருத்தப்பட்டுள்ளது.
இத்துடன், இந்த மர்ம பொருளில் உள்ள பெரிய பைப்பின் பின்பகுதியில் “மேட் இன் யூஎஸ்ஏ (அமெரிக்கா)” எனும் ஆங்கில எழுத்துக்கள் இடம்பெற்றுள்ளன. இதனால், இது ராக்கெட் வெடிகுண்டாக இருக்கக் கூடும் என மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த கீழையூர் கடற்கரை காவல்துறையினர், அந்த மர்ம பொருளை பாதுகாப்பாகக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், இது வெடிகுண்டு அல்லது சந்தேகத்திற்குரிய சாதனமா என்பதை உறுதி செய்வதற்கு, நாகப்பட்டினம் வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்புப் பிரிவு அதிகாரிகளும் அங்கு வரவழைக்கப்பட்டனர்.
இந்த மர்ம பொருள் குறித்த முழு விவரங்கள், உரிய ஆய்வுகளுக்குப் பிறகே தெரியவரும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.