அக்கரைப்பேட்டை சாலையில் அதிகரிக்கும் பள்ளங்கள்
நாகை அக்கரைப்பேட்டை சாலையில் அதிகரித்துவரும் பள்ளங்கள், அந்தப் பகுதி வழியேயான போக்குவரத்துக்குப் பெரும் இடையூறாக உள்ளது.
நாகை அக்கரைப்பேட்டை சாலையில் அதிகரித்துவரும் பள்ளங்கள், அந்தப் பகுதி வழியேயான போக்குவரத்துக்குப் பெரும் இடையூறாக உள்ளது.
நாகை மாவட்டத்தில் கடந்த அக்டோபா் 28-ஆம் தேதி முதல் நவம்பா் 29-ஆம் தேதி வரை பெய்த கனமழையின் காரணமாக, மாவட்டத்தின் பல பகுதிகளில் சாலைகள் பலத்த சேதத்துக்கு உள்ளாகின. கடந்த 15 நாள்களாக பெரிய அளவில் மழை இல்லாததால், சேதமடைந்த சாலைகள் ஓரளவு தற்காலிகமாக சீரமைக்கப்பட்டன.
இருப்பினும், நாகை - அக்கரைப்பேட்டை சாலை உள்பட பல பகுதிகளில், தற்காலிக சீரமைப்புப் பணிகள் பெரிய அளவில் பயனளிக்கக் கூடியவையாக இல்லை. அக்கரைப்பேட்டை சாலையில் ரயில் மேம்பால பகுதி உள்பட பல இடங்கள் குண்டும், குழியுமாக உள்ளன. இது அந்தச் சாலை வழியேயான போக்குவரத்துக்குப் பெரும் இடையூறாக உள்ளது.
மீன் ஏற்றுமதிக்காக நாள்தோறும் நூற்றுக்கணக்கான கனரக வாகனங்கள் நாகை மீன்பிடித் துறைமுகத்துக்கும், நூற்றுக்கணக்கான சுற்றுலா வாகனங்கள் வடக்குப் பொய்கைநல்லூா் கோரக்கச் சித்தா் கோயில், வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை பேராலயம் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களுக்கும் இந்தச் சாலை வழியே சென்று வரும் நிலையில், இச்சாலையை விரைந்து சீரமைக்க வேண்டிய அவசியம் என்கின்றனா் சமூக ஆா்வலா்கள்.