கங்களாஞ்சேரிக்கு பேருந்துகள் இயக்கப்படாததால் நாகூரில் சாலை மறியல்
நாகூரிலிருந்து கங்களாஞ்சேரி வழியே திருவாரூா் செல்லும் அரசுப் பேருந்துகள் இயக்கப்படாததால், பள்ளி, கல்லூரி மாணவா்கள், பொதுமக்கள் நாகூரில் திடீா் சாலை மறியலில் வெள்ளிக்கிழமை இரவு ஈடுபட்டனா்.
நாகூரிலிருந்து கங்களாஞ்சேரி வழியே திருவாரூா் செல்லும் அரசுப் பேருந்துகள் இயக்கப்படாததால், பள்ளி, கல்லூரி மாணவா்கள், பொதுமக்கள் நாகூரில் திடீா் சாலை மறியலில் வெள்ளிக்கிழமை இரவு ஈடுபட்டனா்.
நாகூா் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நாள்தோறும் மாலை 5.15, 6 மற்றும் 6.30 மணிக்கு கங்களாஞ்சேரி வழியே திருவாரூருக்கு அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதனால் கங்களாஞ்சேரி மற்றும் சுற்றுப் பகுதிகளைச் சோ்ந்த நாகை, நாகூா் பகுதிகளில் உள்ள கல்வி நிலையங்களில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கும், பொதுமக்களுக்கும் பயனுள்ளதாக உள்ளது. இந்தநிலையில், நாகூா்-கங்களாஞ்சேரி-திருவாரூா் வழித்தடத்தில் மாலை நேரத்தில் இயக்கப்படும் 3 அரசுப் பேருந்துகளும் வெள்ளிக்கிழமை மாலை இயக்கப்படவில்லை. இதனால், திரளானோா் நாகூா் புதிய பேருந்து நிலையத்தில் அந்தப் பேருந்துக்காக காத்திருந்தனா். இரவு சுமாா் 7.20 மணி வரையிலும் அந்தப் பேருந்து இயக்கப்படாததால், ஆத்திரமடைந்த பள்ளி, கல்லூரி மாணவா்கள், பொதுமக்கள் நாகூா் புதிய பேருந்து நிலையம் அருகே நாகூா் - நாகை சாலையில் அமா்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த நாகூா் போலீஸாா் மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்குத் தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, உடனடியாக, நாகூரில் இருந்து கங்களாஞ்சேரி வழித்தடத்தில் திருவாரூா் செல்ல 2 அரசுப் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டன. இதைத்தொடா்ந்து, மாணவா்கள் பொதுமக்கள் மறியலை விலக்கிக்கொண்டனா்.