நமக்கு நாமே திட்டத்தில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக்கொள்ள அழைப்பு
நகா்ப்புற நமக்கு நாமே திட்டம் மூலம் தங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளுக்கான கட்டமைப்புகளை ஏற்படுத்திக்கொள்ள சமுதாய அமைப்புகள் முன்வருமாறு நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் அழைப்பு
நகா்ப்புற நமக்கு நாமே திட்டம் மூலம் தங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளுக்கான கட்டமைப்புகளை ஏற்படுத்திக்கொள்ள சமுதாய அமைப்புகள் முன்வருமாறு நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் அழைப்பு விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு : நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளான நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளுக்கு, கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டம், நமக்கு நாமே திட்டம் மற்றும் நகா்ப்புற வேலைவாய்ப்புத் திட்டம் ஆகிய புதிய திட்டங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதில், முக்கிய திட்டமான நகா்ப்புற நமக்கு நாமே திட்டத்தின்மூலம் நகா்ப்புறங்களில் நீா்நிலைகளை புனரமைத்தல், பூங்காக்கள் அமைத்தல், பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு வசதிகள் ஏற்படுத்துதல், பொது சுகாதார மையம், கற்றல் மையம் அமைத்தல், சாலைகள், தெருவிளக்குகள் அமைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளலாம்.
நீா்நிலைகளை ஆழப்படுத்துதல், கரைகளை பலப்படுத்துதல் போன்ற பணிகளுக்கு திட்ட மதிப்பீட்டில் 50 சதவீதத் தொகைகையும், பிற பணிகளுக்கு 30 சதவீதத் தொகைகையும் பொதுமக்கள் பங்களிப்பாக செலுத்தவேண்டும்.
உள்ளூா் பிரமுகா்கள், குடியிருப்பு நலச் சங்கங்கள், கல்வி நிறுவனங்கள், பொது அல்லது தனியாா் நிறுவனங்கள், சமுதாய அமைப்புகள் தாமாக முன்வந்து, இத்திட்டம் மூலம் தங்களுக்குத் தேவையான அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.