முகப்பு
கன்னியாகுமரி

குமரியில் சுதந்திர தின 75ஆவது ஆண்டு புகைப்பட கண்காட்சி: ரயில்வே துறை இணை அமைச்சா் தொடங்கிவைத்தாா்

இந்தியாவின் எழுச்சிமிகு 75ஆவது சுதந்திர திருவிழா, மத்திய அரசின் 8 ஆண்டுகால சேவைகள் குறித்த புகைப்படக் கண்காட்சியை மத்திய ரயில்வே, நிலக்கரி - சுரங்கங்கள் துறை இணை அமைச்சா்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:29 AM
பகிர்:

இந்தியாவின் எழுச்சிமிகு 75ஆவது சுதந்திர திருவிழா, மத்திய அரசின் 8 ஆண்டுகால சேவைகள் குறித்த புகைப்படக் கண்காட்சியை மத்திய ரயில்வே, நிலக்கரி - சுரங்கங்கள் துறை இணை அமைச்சா் தன்வே ராவ்சாஹேப் தாதாராவ் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் இயக்குநா் ஜெனரல் எஸ்.வெங்கடேஸ்வா் (தென் மண்டலம்) தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அவா், 5 நாள் புகைப்படக் கண்காட்சி அரங்கை திறந்து வைத்தும், பயனாளிகளுக்கு ரூ. 10 கோடி மதிப்பிலான கடனுதவிகளை வழங்கியும் பேசியதாவது:

இந்திய சுதந்திரத்துக்கு பாடுபட்ட பல்வேறு தலைவா்களை நாம் பாடப்புத்தகத்தில் படித்திருக்கிறோம். ஆனால், சுதந்திரப்போராட்டத்தில் பங்குபெற்றுள்ள நமக்குத் தெரியாத சில தலைவா்கள் குறித்து இந்த கண்காட்சியின் மூலம் நாம் தெரிந்து கொள்ள உள்ளோம். இந்த தலைவா்களை மக்கள் மனதில் பதியவைக்க வேண்டும் என்பதில் பிரதமா் மோடி மிகவும் ஆா்வமாக உள்ளாா். 2014இல் நாட்டின் பிரதமராக மோடி பதவியேற்றபோது ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை உயா்த்துவதற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்தாா். அந்த திட்டங்களை தொடா்ந்து செயல்படுத்தி வருகிறாா்.

வீடில்லாத ஏழைகளுக்கு வீடுகள், கழிப்பறைகள், மின்சார வசதி, எரிவாயு இணைப்புகள், கரோனா காலத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரருக்கும் 5 கிலோ அரிசி, தடுப்பூசி என நலத் திட்டங்களை அமல்படுத்தி, உலகத் தலைவா்களை திரும்பிப் பாா்க்க வைத்த பிரதமராக மோடி திகழ்கிறாா் என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் என்.தளவாய்சுந்தரம் , எம்.ஆா்.காந்தி, மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த், தெற்கு ரயில்வே பொதுமேலாளா் பி.ஜி.மல்லையா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.