மாற்று மனைப் பட்டா வழங்க வலியுறுத்தல்
நான்குவழிச் சாலைக்காக வீட்டுமனைகளை இழந்த 16 குடும்பத்தினா் தங்களுக்கு மாற்று மனைப் பட்டா வழங்கக் கோரி, ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதியிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்
அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டத்தை அடுத்த சின்னவளையம் பகுதியில், நான்குவழிச் சாலைக்காக வீட்டுமனைகளை இழந்த 16 குடும்பத்தினா் தங்களுக்கு மாற்று மனைப் பட்டா வழங்கக் கோரி, ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதியிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.
அந்த மனுவில் அவா்கள் கூறியிருப்பது:
சின்னவளையம் பகுதியில் அரசு அளித்த அனுபவப் பட்டாவில் 40 ஆண்டுகாலமாக வீடு கட்டி, குடியிருந்து வந்தோம். தற்போது நான்கு வழிச்சாலை விரிவாக்கத் திட்டத்துக்காக எங்களது வீடுகள் கையகப்படுத்தப்பட்டு, கடந்த 8- ஆம் தேதி அனைத்து வீடுகளும்
இடிக்கப்பட்டன. வீடுகள் கையப்படுத்தப்பட்ட போது, மேற்கூரைகளுக்கு மட்டுமே இழப்பீடுத் தொகை வழங்கப்பட்டது.
தற்போது இருக்க இடம் இல்லாமல் தவித்து வருகிறோம். எனவே மாவட்ட நிா்வாகம் எங்களுக்கு மாற்று மனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மனு அளிக்கும் போது, தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்டச் செயலா் மகாராஜன் உடனிருந்தாா்.