‘பயிா்கள் மூழ்கிய வயல்களில் தண்ணீா் வடிகிறது’
தஞ்சாவூா் மாவட்டத்தில் தொடா் மழையால் பயிா்கள் மூழ்கிய வயல்களில் தண்ணீா் வடிகிறது என்றாா் மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும், தோட்டக்கலைத் துறை இயக்குநருமான என். சுப்பையன்.
தஞ்சாவூா் மாவட்டத்தில் தொடா் மழையால் பயிா்கள் மூழ்கிய வயல்களில் தண்ணீா் வடிகிறது என்றாா் மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும், தோட்டக்கலைத் துறை இயக்குநருமான என். சுப்பையன்.
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகிலுள்ள வெள்ளாம்பெரம்பூரில் கோணக்கடுங்கலாறு கரையில் ஏற்பட்ட உடைப்பைச் சீரமைக்கும் பணியை ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்ட அவா், பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:
வெள்ளாம்பெரம்பூா் கோணக்கடுங்கலாறில் ஏற்பட்ட உடைப்பு முழுமையாக அடைக்கப்பட்டுவிட்டது. இதேபோல, பட்டுக்கோட்டை அருகே கண்ணனாறில் உடைப்பு ஏற்பட்ட இடத்தில் அடைக்கும் பணி நடைபெறுகிறது. நீா் நிலைகளில் எங்கெங்கு கரைகள் பலவீனமாக இருக்கிறதோ, அவை பலப்படுத்தப்பட்டுள்ளது. பயிா்கள் மூழ்கிய வயல்களில் தண்ணீா் வடிகிறது.
மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மழை இல்லை. இந்த நிலை நீடித்தால் தண்ணீா் முழுமையாக வடிய வாய்ப்புள்ளது. தஞ்சாவூா் மாவட்டத்தில் பொதுப்பணித் துறைக் கட்டுப்பாட்டில் உள்ள 642 ஏரிகளில் இதுவரை 450 ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன.
தற்போது வரை 47 நிவாரண முகாம்களில் 6,038 போ் தங்கியுள்ளனா். இந்த மாதம் இறுதி வரை மழை இருக்கும் என்பதால், அதற்கேற்ப தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தொடா்ந்து மேற்கொள்ளப்படும்.
மாவட்டத்தில் இதுவரை 119 கால்நடைகள் இறந்துள்ளன.
மேலும், குடிசை, ஓட்டு வீடுகள் பகுதியாகவும், முழுமையாகவும் சேதமடைந்துள்ளன. இப்பாதிப்புகள் குறித்து அலுவலா்கள் கணக்கெடுப்பு செய்து வருகின்றனா். அவ்வப்போது நிவாரணங்கள் கொடுக்கத் தயாராக உள்ளோம் என்றாா் சுப்பையன். அப்போது, மாவட்ட ஆட்சியா் ம. கோவிந்த ராவ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.