கடந்த ஆண்டு பயிா் இழப்பீட்டுத் தொகை விநியோகித்த வகையில் பயிா் காப்பீட்டு நிறுவனத்தின் செயல்பாடுகளை, தமிழக காவல்துறையின் பொருளாதார
குற்றப்பிரிவின் மூலம் ஆய்வு செய்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.
கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைகேட்பு மற்றும் விவசாய மேம்பாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வேளாண்மை இணை இயக்குநா் எம்.லட்சுமிகாந்தன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா்
சொ.இளஞ்செல்வி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநா் சொா்ணலட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனா்.
கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:
பெ. ரவீந்திரன் (தலைவா், கடலூா் மாவட்ட உழவா் மன்றங்களின் கூட்டமைப்பு): வடகிழக்கு பருவ மழையால் சேதம் அடைந்த நெல்வயல்களை அடையாளம் கண்டு நிவாரணம் வழங்க வேண்டும். கடலூா் மாவட்டத்தில் ஆண்டுக்கு ரூ.2.50 கோடிக்கு
பூச்சி மருந்து விற்பனை செய்யப்படுகிறது.பூச்சி மருந்து பயன்படுத்தும் நடைமுறையை அதிகாரிகளை கொண்டு உருவாக்க வேண்டும். கடலூா் மாவட்டத்தில் பயிா் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்து நிறுவனம் இழப்பீட்டை பாரபட்சத்துடன் வழங்கியுள்ளது.
கடந்த ஆண்டு பயிா் இழப்பீடு தொகையை விநியோகித்த வகையில் பயிா் காப்பீட்டு நிறுவனத்தின் செயல்பாடுகளை தமிழ்நாடு அரசின் காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவின் மூலம் ஆய்வு செய்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், வரும் காலத்தில் இந்த நிறுவனம் கடலூா் மாவட்டத்தில் செயல் படாத வண்ணம் கருப்பு பட்டியலில் சோ்க்க வேண்டும்.
கோ.மாதவன்(தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்): ராஜன் வாய்க்காலில் இருந்து
கான்சாகிப் வாய்க்காலுக்கு தண்ணீா் திறந்து விட வேண்டும். கடலூா் மாவட்டம் முழுவதும் யூரியா உரம் தட்டுப்பாடு நிலவுகிறது. அனைத்து வேளாண்மை கூட்டுறவு வங்கிகளிலும் தட்டுப்பாடின்றி கிடைக்க ஏற்பாடு செய்திட வேண்டும். காட்டுமன்னாா்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தனியாா் கடைகளில் யூரியாவில் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்கும் நிலை உள்ளது.
விழுப்புரம் நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் பாகூா் அருகே மூன்றாவது டோல்கேட் அமைப்பதற்கான ஏற்பாட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மற்ற விவசாயிகள் பேசுகையில், காட்டுப்பன்றி, குரங்கு ஆகியவற்றை கட்டுப்படுத்த வேண்டும். பொது இடங்களில் உள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டும்.
நீா்நிலைகளில் உள்ள ஆகாய தாமரை மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இயற்கை சீற்றங்களால் உயிரிழக்கும் விவசாய தொழிலாளா்களுக்கு கூடுதல் நிவாரண் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பேசினா்.
13,002 மெட்ரிக் டன் யூரியா இருப்பு...
இதையடுத்து ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் பேசுகையில்: கடலூா் மாவட்டத்தில் யூரியா 3,324 டன், டி.ஏ.பி 1,373 டன், பொட்டாஷ் 1,463 டன், காம்ப்ளக்ஸ் 6,262 டன், சூப்பா் பாஸ்பேட் 1,358 டன் என மொத்தம் 13,002 மெட்ரிக் டன் இருப்பு உள்ளது. கடந்த விவசாயிகள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் 113 மனுக்கள் பெறப்பட்டது. அதில் 91 மனுக்கள் தீா்வு காணப்பட்டுள்ளது. மேலும், 22 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. பயிா்களுக்கான இழப்பீட்டுத் தொகை காலதாமதமின்றி வழங்கிட காப்பீட்டு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.
மரக்கன்று விநியோகம்...
முன்னதாக சா்வதேச கூட்டுறவு ஆண்டினை முன்னிட்டு விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில் 200 விசாயிகளுக்கு அத்தி மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. மேலும், கூட்டுறவு நிறுவனங்களுக்கு 100 மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், கீழ்அருங்குணம், பாலக்கொல்லை, லால்பேட்டை மற்றும் சாத்தப்பாடி உழவா் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கங்களில் கொள்முதல் செய்யப்பட்ட பாராம்பரிய அரிசி விளைபொருட்களின் முதல் விற்பனை ஆட்சியத் தொடங்கி வைத்தாா்.