முகப்பு
செய்திகள்

சமீபத்தில் ஒப்பந்தமாகிய படங்களில் நடிக்க மறுத்து விலகிய முன்னணி நடிகைகள் யார்?

அமலா பாலை படக்குழுவினர் தான் வெளியேற்றினார்கள் என்ற தவறான தகவல்கள்

Updated On : 10 டிசம்பர், 2017 at 1:10 PM
பகிர்:

சில மாதங்களுக்கு முன்னால் சாமி 2 படத்தில் நடிக்க மறுத்து வெளியேறினார் நடிகை த்ரிஷா. இந்தப் பிரச்னை தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டு த்ரிஷாவிற்கு ரெட் கார்ட் தருமளவிற்கு நீண்டு வருகிறது.

த்ரிஷாவிற்குப் பதிலாக நயன்தாராவை நடிக்கக் கேட்டுள்ளனர் படக்குழுவினர்.

இந்நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'தளபதி 62' படத்தில் பிக் பாஸ் புகழ் நடிகை ஓவியா நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளிவந்தது. ஆனால் விஜயின் ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிப்பதால் ஓவியா இந்தப் படத்தில் நடிக்க ஆரம்பத்திலிருந்தே தயக்கம் காட்டினார். அதே சமயத்தில் ராகவா லாரன்சுடன் ‘காஞ்சனா-3’ பட வாய்ப்பும் ஓவியாவுக்கு வந்து சேர்ந்தது. ஆனால் திடீரென்று அந்தப் படத்திலிருந்து ஓவியா விலகினார் என்ற செய்தியும் அடிபட்டது. (தற்போது மீண்டும் இணைந்தார் என்கிறது கோடம்பாக்கம் வட்டாரம்).

Advertisement

தற்போது தளபதி 62 படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கும் நிலையில் தனக்கு முக்கியத்துவம் தரும் கதாபாத்திரமாக அது இல்லை என்று ஓவியா நினைத்ததால் படத்தில் பங்கேற்க மறுத்துவிட்டார் என்கிறது ஓவியா தரப்பு. ஓவியா மறுத்த இந்த வேடத்தில் அதே பிக் பாஸ் புகழ் ஜுலி நடிக்கலாம் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

யார் நடிக்கிறார்கள் என்பதை விட ஏன் ஓவியா இந்த வேடத்தை மறுத்துவிட்டார் என்பதே கோடம்பாக்கம் டாக்காக இருக்கிறது. ஓவியா வளரும் நடிகை. புகழ் ஏணியில் இருக்கும்போது கிடைக்கும் நல்ல வாய்ப்புக்களை பயன்படுத்துவதே புத்திசாலித்தனம். ஆனால் ஓவியா தன் மனத்துக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதை மட்டுமே செய்பவர் என்று அறியப்படுகிறார். எனவே தளபதி 62 பட விலகல் குறித்து இதுவரை ஓவியா மனம் திறக்கவில்லை. விரைவில் தனது தரப்பு வாதத்தை கூறுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் வெளியான திருட்டுப் பயலே 2 வெற்றியை கொண்டாடிக் கொண்டிருக்கிறார் அமலா பால். அமலாவும் சமீபத்தில் ஒரு படத்திலிருந்து வெளியேறி விட்டதாக தகவல் வெளியானது. ஸ்ரீ கோகுலம் மூவிஸ் சார்பில் கோகுலம் கோபாலன் தயாரிக்கும் காயம்குளம் கொச்சுண்ணி என்ற மலையாளப் படத்தை ரோ‌ஷன் ஆன்ட்ரூஸ் என்பவர் இயக்குகிறார். இந்த படத்தில் கொச்சுண்ணியாக நடிக்கும் நிவின் பாலிக்கு ஜோடியாக அமலாபால் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.

காயம்குளம் கொச்சுண்ணியில் கதாநாயகி சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்க உள்ள நிலையில் அமலா பால் அப்படத்திலிருந்து விலகுகிறார் என்ற தகவல் வெளியானது. தொடர்ந்து பல படங்களில் நடித்து வருவதால், கணிசமான தேதிகளை வழங்க முடியவில்லை எனக் கூறி இந்தப் படத்திலிருந்து தான் விலகி கொள்வதாக அமலாபால் அறிவித்தார். படக்குழுவினரும் வேறு வழியின்றி சம்மதித்தனர்.{pagination-pagination}

அமலா பாலை படக்குழுவினர் தான் வெளியேற்றினார்கள் என்ற தவறான தகவல்கள் வைரலாகத் தொடங்க, தன்னுடைய தரப்பிலிருந்து அமலா பால் தனது டிவிட்டர் பக்கத்தில், தேதி பிரச்னையால் நானே தான் முடிவெடுத்து அப்படத்திலிருந்து விலகினேன். இது போன்ற கற்பனை செய்திகளை வெளியிடும் வேலை வெட்டி இல்லாதவள் நான் அல்ல என்ற தொனியில் நறுக்கென்று பதில் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.