முகப்பு
செய்திகள்

வாதாட வேண்டியவர்கள் பேரம் பேசியதால் நேர்ந்த விபரீதம்: அனிதா தற்கொலை குறித்து கமல் ஆவேசம்!

வாதாட வேண்டியவர்கள் பேரம் பேசியதால் நேர்ந்த விபரீதம் என்று தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதா குறித்து நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

செய்திகள்

வாதாட வேண்டியவர்கள் பேரம் பேசியதால் நேர்ந்த விபரீதம்: அனிதா தற்கொலை குறித்து கமல் ஆவேசம்!

வாதாட வேண்டியவர்கள் பேரம் பேசியதால் நேர்ந்த விபரீதம் என்று தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதா குறித்து நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:47 PM
பகிர்:

திருவனந்தபுரம்: வாதாட வேண்டியவர்கள் பேரம் பேசியதால் நேர்ந்த விபரீதம் என்று தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதா குறித்து நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நடிகர் கமல்ஹாசன் கேரள முதல்வர் பினராயி விஜயனை இன்று அவரது இல்லத்தில் சந்தித்தார்.  ஓணம் பண்டிகையை ஒட்டி  கமலுக்கு முதல்வர் விஜயன் விருந்தளித்ததாக கூறப்பட்டது. பின்னர் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட கமல் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்பொழுது நீட் தேர்வு காரணமாக மருத்துவ படிப்புக்கு இடம் கிடைக்காமல் தற்கொலை செய்து கொண்ட அரியலூர்  மாணவி அனிதா குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் தெரிவித்த கருத்துக்களாவது :

எவ்வளவு பெரிய அவமானம் இது? இந்த விவகாரத்தில் உடனடியாக அந்த பெண் என்ன ஜாதி, மதம், எந்த ஊர் என்று பேச வேண்டாம். அனிதா என்னுடைய மகள் போன்றவள். அவரது பெயர் ஸ்ருதி, அக்ஷரா என்றிருந்தால் மட்டும்தான் நான் அவருக்காக வருத்தப்பட வேண்டுமா?

'நீட்' விவகாரத்தில் நல்ல செய்தி வருமென்று குடுகுடுப்பை  ஆட்டியவர்கள் காணாமல் போய் விட்டார்கள்.  இந்த பெண்ணும் கண்ணை மூடி விட்டார். அனிதா விவகாரத்தில் கடவுளும் கண் மூடி விட்டார்.

இந்த விவகாரத்தில் நாமனைவரும் ஒன்று திரண்டு போராட வேண்டும். இதற்கு ஜாதி மதம் எதுவும் தடையாக இருக்க கூடாது. திருமாவளவன் போன்ற தலைவர்கள் உடனடியாக களமிறங்க வேண்டும். கட்சி எல்லைகளை எல்லாம் தாண்டி இதில் செயல்பட வேண்டும். அனிதா உங்கள் மகள் போன்றவள். என் மகள் போன்றவள்.

மத்திய அரசு, மாநில அரசு, நீதின்றம் எல்லாம் நம்மால் உருவாக்கப்பட்டவை. எனவே அங்கெல்லாம் வாதாட வேண்டியவர்கள் பேரம் பேசிக் கொண்டிருந்ததால் நேர்ந்த விபரீதம் இது.

அனிதா +2 தேர்வில் பெற்றுள்ள மதிப்பெண்களைப் பார்த்தால் நாம் ஒரு நல்ல மருத்துவரை இழந்து விட்டோம் என்று தெரிகிறது.

மாணவிக்கு இன்னும் மன உறுதி வேண்டும் என்று சொல்லப்படும் அறிவுரையினை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் மாணவர்கள் இதற்காக போராட அவர்களுக்கு அவகாசம் இருக்கிறதா என்று சந்தேகப்படுகிறேன். இந்த அநீதிக்கு எதிரான போராட்டத்தில் மக்கள் அனைவரும் பங்கு பெற வேண்டும்.

இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்தார்.  

முழு கட்டுரையைப் படிக்க →