சென்னை: தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை அமலா பால் அளித்த புகாரில் மேலும் ஒருவரை போலீசார் திங்களன்று கைது செய்தனர்.
மலேசிய கலை நிகழ்ச்சி ஒன்றுக்காக சென்னை தி.நகரில் நடன பயிற்சியில் ஈடுபட்டிருந்த தன்னிடம், தொழிலதிபர் ஒருவர் ஆபாசமாகப் பேசி பாலியல் தொல்லை கொடுத்தாக நடிகை அமலா பால் சில தினங்களுக்கு முன்னர் மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார்.
இந்த புகாரில் நடனப்பள்ளி உரிமையாளரும் , தொழிலதிபருமான அழகேசன் என்பவர் மலேசியாவில் இருக்கும் தமது நண்பருடன் டின்னர் சாப்பிட செல்ல வேண்டும் என அழைத்ததாக அமலா பால் புகார் தெரிவித்து இருந்தார். இந்த புகாரையடுத்து சென்னை கொட்டிவாக்கத்தைச் சேர்ந்த தொழிலதிபர் அழகேசன் என்பவரை கைது செய்துள்ள போலீசார், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகை அமலாபாலுக்கு தொல்லை கொடுத்ததாக கூறப்பட்ட புகாரில் போலீசார் மேலும் ஒருவரை கைது செய்தனர். அவர் குறிப்பிட்ட மலேசிய கலைநிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்திருந்த நிறுவனதின் ஊழியரான பல்லாவரத்தை சேர்ந்த பாஸ்கர் என்று தெரிய வந்துள்ளது.
இந்த வழக்கில் தொடர்புடைய வினோத் என்பவரை போலீசார் வலைவீசித் தேடிவருவதாகத் தெரிகிறது.