ரஜினி, விஜய் என இரு நடிகர்களின் புதிய படங்களைத் தயாரிக்கிறது கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ்.
விஜய் - இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இணையும் படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் தொடங்கியது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார்.
மெர்சல் படத்துக்குப் பிறகு விஜய் படத்துக்கு மீண்டும் இசையமைக்கிறார் ஏ.ஆர். ரஹ்மான். ஒளிப்பதிவாளராக கிரிஷ் கங்காதரனும் படத்தொகுப்பாளராக ஸ்ரீகர் பிரசாத்தும் பணியாற்றவுள்ளார்கள். நடிகர்களில் விஜய், கீர்த்தி சுரேஷ், யோகி பாபு ஆகியோர் மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளார்கள்.
துப்பாக்கி, கத்தி படங்களுக்குப் பிறகு விஜய் - முருகதாஸ் இணையும் மூன்றாவது படமிது. ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த எந்திரன் படத்துக்குப் பிறகு சன் பிக்சர்ஸ் இப்படத்தைத் தயாரிக்கிறது. பைரவா படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த கீர்த்தி சுரேஷ் மீண்டும் அவருடன் இணைந்து நடிக்கிறார்.
படத்தொடக்கவிழாவை முன்னிட்டு இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ், இனிய தீபாவளி வாழ்த்துகள் என்று ஆங்கிலத்தில் ட்வீட் வெளியிட்டார். இதையடுத்து விஜய் படம் தீபாவளிக்கு வெளியாவதை உறுதி செய்துள்ளார் முருகதாஸ்.
இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தைத் தயாரிக்கவுள்ளதாக சன் பிக்சர்ஸ் இன்று அறிவித்துள்ளது. காலா, 2.0 ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ள ரஜினி, அரசியல் பரபரப்புகளுக்கிடையே இந்தப் படத்தில் நடிக்கவுள்ளார்.
இரு மிகப்பெரிய நடிகர்களின் படங்களைத் தயாரிப்பதன் மூலம் தமிழ்த் திரையுலகில் மீண்டும் கவனம் ஈர்த்துள்ளது சன் பிக்சர்ஸ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.